டொனெட்ஸ்க் நகரை மீட்க உக்கிர தாக்குதலை தொடங்கியது உக்ரைன்
கிவி: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் டொனெட்ஸ்க் நகரை மீட்பதற்காக உக்ரைன் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை முடங்கியுள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரை தற்போது ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த பகுதியில்தான் 298 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டொனெட்ஸ்க் நகரை மீட்பதற்கான உக்கிரமான தாக்குதலை உக்ரைன் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியை தங்கள் வசம் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்துகிறது.
உக்ரைன் நாட்டில் ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த இரு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்திருந்தார்.
இதனிடையே உக்ரைனின் இந்த நடவடிக்கையை திசை திருப்பும் வகையில் அந்நாட்டின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான செயற்கைக் கோள் படங்களையும் அமெரிக்கா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.