கிழக்கு உக்ரைன் மாகாணங்களுக்கு சுயாட்சி- கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது!!
கீவ்: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதிக்கு, வரம்புக்குள்பட்ட சுயாட்சி அதிகாரத்தை 3 ஆண்டுகளுக்கு வழங்க உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ஒருபகுதியாக இருந்த கிரீமியா, பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைவதாக அறிவித்தது. இதனை ரஷ்யாவும் ஏற்றுக் கொண்டு தனது நாட்டின் ஒருபகுதியாக கிரீமியாவை பிரகடனம் செய்தது.
ரஷ்யா மீது பொருளாதார தடை
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. கிரிமீயாவைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனின் டெனெட்ஸ்க், லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களிலும் ரஷ்யா ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அதிபர் உறுதி
கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் இம்மோதலில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் அறிவித்திருந்தார்.
கூடுதல் சுயாட்சி- பொதுமன்னிப்பு
இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கும் மசோதா நேற்று நிறைவேறியது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் பொரொஷென்கோவின் அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு உக்ரைனில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு வரம்புக்குட்பட்ட சுய ஆட்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்..
கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்கு வரம்புக்குட்பட்ட சுயாட்சி மட்டுமின்றி, அரசுத்துறைகளில் ரஷ்யா மொழியைப் பயன்படுத்துவது, வரும் நவம்பர் 9-ந் தேதி உள்ளூர் தேர்தல்களை நடத்துவது ஆகிய அதிகாரங்களை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு
உள்ளூர் நிர்வாகம்- ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்படும்
இவ்வாறு பொரொஷென்கோ கூறியுள்ளார்.