மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆஸி. தொடர்ந்து வழங்க ஐ.நா. வலியுறுத்தல்
மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியா அரசு பப்பு நியூ கினியா மற்றும் மனுஸ்தீவில் நிர்வகித்து வரும் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அரசு அண்மையில் லோம்ப்ரம் அகதிகள் முகாமை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த முகாம்களில் இருந்த அகதிகள் மாற்று முகாம்களுக்கு செல்ல மறுத்துவிட்டனர்.
மாற்று முகாம்களில் பாதுகாப்பு இல்லை என்பது அகதிகளின் குற்றச்சாட்டு. இதனையடுத்து அகதிகளை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆஸ்திரேலியா அரசு நிறுத்திவிட்டது.
இதனால் தண்ணீரை குப்பை தொட்டிகளில் அகதிகள் தேக்கி வைத்து குடிக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கோல்வில்லே, ஆஸ்திரேலிய அரசு மூடுவதாக அறிவித்த முகாம்களில் உள்ள 600 அகதிகளுக்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
தாங்கள் வெளியேவந்தால் உள்ளூர்மக்கள் தாக்குவார்கள் என அஞ்சுகின்றனர் அகதிகள். கடந்த காலங்களில் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அவர்களது அச்சத்தில் நியாயம் இருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆஸ்திரேலியா மற்றும் பப்பு நியூ கினியா அரசுகளுக்கு உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியா அரசோ, படகுகள் மூலமாக தஞ்சமடைந்த அகதிகளை ஆஸ்திரேலியாவில் ஒருபோதும் குடியமர்த்த முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.