ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வெற்றி- சர்வதேச அரங்கில் தலைகுனிந்த போர்க்குற்றவாளி இலங்கை!
ஜெனிவா: பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்துவிட்டு போர்குற்றவாளி என்கிற அசூசையை எதுவும் இல்லாமல் சர்வதேச அரங்கில் இறுமாப்புடன் வலம் வந்த இலங்கையின் பேரினவாதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இன்றைய தீர்மானம்.
போர்க்குற்றங்கள் புரிந்த தேசங்கள் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் கூட தண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பது சரித்திரம். முள்ளிவாய்க்காலில் நந்திக்கடலில் சர்வதேசத்தின் கண் முன்னரேயே அப்பாவி ஈழத் தமிழர்கள் நச்சு பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்து படுகொலைக்குள்ளாக்கப்பட்டனர்.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போராளி தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த பச்சை இனப்படுகொலையை கண்டிக்க, தண்டிக்க எவரும் இல்லையே தமிழ்ச் சமூகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
தமிழர் துயரம்
இந்த குமுறல்கள் மீது எரி எண்ணெய்யை ஊற்றும் விதமாக சர்வதேச அரங்குகளில் இறுமாப்புடன் மனித உரிமைகளில் ஈடுபடவே இல்லை என சண்டியர்த்தனம் பேசியது இலங்கை. ஐ.நா. மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரும் போதெல்லாம் லாபிகள் மூலம் இலங்கை ஜெயிப்பதும் தமிழர்கள் கூனி குறுகி நிற்கும் பேரவலமும் தொடர்ந்து கொண்டிருந்தது.
நிறைவேறிய தீர்மானம்
இன்று சரித்திரம் திரும்பி இருக்கிறது. தமிழரின் ஓயாத அழுகை அலைகளுக்கு ஓர் ஆறுதல் கிடைத்திருக்கிறது. சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியான இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேறி இருக்கிறது.
இலங்கைக்கு எதிராக நாடுகள்
அதாவது நீ மனித உரிமைகளை மீறிய ஒரு குற்றவாளி என சர்வதேச சமூகம் இலங்கையை குற்றவாளிக் கூண்டிலே ஏற்ற தொடங்கி இருக்கிறது. இந்த குற்றவாளிக் கூண்டு நிச்சயம் பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கி நகரும். அங்கே ராஜபக்சே சகோதரர்களும் சிங்கள பேரினவாதிகளும் தண்டனை பெறுவார்கள் என்பதற்கு ஒரு தொடக்கமாகவே இன்றைய தீர்மானத்தின் வெற்றி இருக்கிறது.
தண்டனை கிடைக்கும்
இந்த தீர்மானம், இலங்கையை பெரும் நெருக்கடிக்குள்ளாக்காது என்பது இன்றைய நிலை. ஆனால் மோசமான தண்டனைகளைப் பெற்றுத் தருவதற்கான ஆரம்பப் புள்ளி இதுதான் என்பதுதான் யதார்த்தமும் கூட.