'தீவிரவாதி ஒசாமா' என்று கூறி அமெரிக்காவில் சீக்கிய பேராசிரியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
நியூயார்க்: ஒசாமா எனக் கூறி, சீக்கியப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தாக்கப் பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான மக்கள் உரிமைக் குழுவின் நியூயாயர்க் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர் அல்கொய்தாவை நிறுவியவரான ஒசாமா பின்லேடன். அமெரிக்கா மீது தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அமெரிக்கர்களின் எதிரி ஆன ஒசாமா, கடந்த 2011ம் ஆண்டு, பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது, அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் கடலில் வீசப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து ஒசாமா மீது கோபமாக உள்ள அமெரிக்கர்கள் சிலர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரப்ஜோத் சிங்கை ஒசாமா எனக் கூறி தாக்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பிரப்ஜோத் சிங்கை சுற்றி வளைத்த கும்பல், அவரை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சீக்கியர் பிரப்ஜோத் சிங்கை தீவிரவாதி ஒசாமா என்று கூறியுள்ளனர். சாலையில் நடந்த இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கும்பல் தாக்கியதில் பிரப்ஜோத்தின் தாடை பகுதியில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது பற்கள் மிக மோசமாக உடைபட்டிருப்பதாகவும் அவரது நண்பர் சிம்ரன் ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பிரப்ஜோத் சிங் மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அப்பகுதி தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான மக்கள் உரிமைக் குழுவின் நியூயாயர்க் கிளை.