குறுக்கும் நெடுக்குமாக ஓடி ‘தண்ணி’ காட்டிய 70 கி ஆமை... விரட்டிப் பிடித்த அமெரிக்க போலீசார்
லாஸ் ஏஞ்செலெஸ்: வீட்டிலிருந்து தப்பித்து அமெரிக்காவின் தெருக்களில் வேகமாக ஓடிய 70 கி ஆமையை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
ஆமை என்றாலே மிகவும் பொறுமையாக மெதுவாக நடக்கக் கூடியது என்பது தான், ‘முயல் - ஆமை' கதை முதற்கொண்டு நாம் நம்பி வந்த தகவல். ஆனால், அமெரிக்காவில் பெரிய சைஸ் ஆமை ஒன்று போலீசாருக்கே தண்ணி காட்டியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் 70கி ஆப்பிரிக்க ஆமை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். வீட்டிலிருந்து தப்பி வந்த அந்த ஆமை தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியுள்ளது.
பெரிய சைஸ் ஆமை ஒன்று தெருக்களில் திரிவதாக தகவலறிந்து போலீசார் விரைந்து வந்துள்ளனர். ஆனால், அவர்களின் கைக்குக் கிடைக்காமல் வேகமாக ஓடியுள்ளது ஆமை. போலீசாரும் விடாமல் துரத்திச் சென்றுள்ளனர்.
தெருக்களின் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய அந்த ஆமையை ஒரு வழியாகப் பிடித்த போலீசார், அதனை கடல் ஆமை மற்றும் ஆமைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதற்குள்ளாக காணாமல் போன ஆமையைத் தேடி வந்த அதன் உரிமையாளர்கள் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் ஆமையை காப்பகத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
‘அந்த ஆமை எங்களுக்கே தண்ணி காட்ட பார்த்தது. ஆனால், எங்கள் போலீசார் சாமர்த்தியமாக அதை விரட்டிச் சென்று பிடித்தனர்' என்று ஒரு போலீஸ் அதிகாரி தனது ‘பேஸ்புக்' பக்கத்தில் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
ஆமைகள் அதிகபட்சமாக மணிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் வேகம் வரை ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.