''தலிபான்கள் முன்னேறி இருக்கலாம்.. ஆனால் போரை வெல்லப்போவது நாங்கள்தான்.. ஆப்கன் அதிபர் திட்டவட்டம்!
காபூல்: இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டு தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கி வந்த அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்பு படைகளை விலக்கிக் கொண்டது.
இதன்பின்னர் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.

தலிபான்கள் ஆதிக்கம்
எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளனர் பயங்கரவாதிகள். ஆப்கானிஸ்தானில் 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியை தலிபான்கள் வசம் சென்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் அரசு படைகள்-தலிபான் பயங்கரவாதிகள் பயங்கரமாக மோதலை தொடங்கியுள்ளதால் அங்கு தொடந்து பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள்தான். தற்போதுஆப்கானிஸ்தானில் நடப்பதற்கு எங்களைக் குறை கூறக் கூடாது என்று இம்ரான் கான் அவருக்கு பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தான் உறவு தேவை
இந்த நிலையில் ''அமைதிக்கு பாகிஸ்தான் தேவை. எங்களுக்கு ஒரு நீடித்த உறவு தேவை, பாகிஸ்தானுடனான கணிக்கக்கூடிய உறவு பயனளிக்கும்'' என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இன்று தெரிவித்துள்ளார். ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். ''நகரங்கள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் பயங்கரவாதிகள் முன்னேறி வருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் தேசியப் படைகள் தலிபான்களை விட மேலோங்கும் என்று அவர் கூறி உள்ளார்.

நாங்கள் வெற்றி பெறுவோம்
''போர்களில் சில இடங்களில் வெற்றி பெறுவது போரை முழுவதும் வென்று விட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் [தலிபான்கள்] போர்களில் சில பகுதிகளில் வென்றுள்ளனர். ஆனால் முடிவில் அவர்கள் போரை இழக்கப் போகிறார்கள். நாங்கள் வெற்றி பெறுவோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார். மேலும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு அஷ்ரப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications