மோடி ஆஹா, ஓஹோ: புகழும் சிலிக்கான் வேலி ஐடி 'தலை'கள்
சிலிக்கான் வேலி: சிலிக்கான் வேலியில் நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியை முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓக்கள் பாராட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பல நிறுவனங்களின் சிஇஓக்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மோடியையும், தொழில்நுட்பம் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளனர்.
சிஸ்கோ தலைவர்
மோடி சார், நீங்கள் உலகையும், இந்தியாவையும் மாற்றுவீர்கள். பிரதமர் மோடி உலக அளவிலான டிரெண்டுகளை புரிந்துகொள்கிறார். உங்கள் நாட்டின் அருமையான தூதர் நீங்கள் தான் என சிஸ்கோ தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
நான் கடந்த ஆண்டு இந்தியா சென்றிருந்தபோது அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர முடிந்தது. சிலிக்கான் வேலியை போன்றே இந்தியாவிலும் உத்வேகமுள்ள தொழில்முனைவோரை பார்த்தேன். புதுமையின் இடமாக இந்தியாவை ஆக்குவதில் மோடி முனைப்பாக உள்ளார் என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சத்யா நாதெல்லா
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியாவுக்கு கொண்டு வருவதும், இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பை மதிப்பதும் எங்களுக்கு முக்கியம் ஆகும். அங்குள்ள மக்களுக்கு உதவ விரும்புகிறோம். மோடி இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா.
பால் இ ஜேக்கப்ஸ்
மோடியின் தலைமையில் இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் செல்போன் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம். மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று குவால்காம் எக்சிகியூட்டிவ் சேர்மன் பால் இ ஜேக்கப்ஸ் தெரிவித்துள்ளார்.