"திரும்புது" வரலாறு.. கர்ஜித்த பெண்கள்.. "நாங்களும் வர்றோம்".. கைகோர்த்த ஆண்கள்.. திகைத்த தாலிபன்கள்
ஆப்கனில் பல்கலை மாணவிகள், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்
ஆப்கன்: மாணவிகளின் திடீர் போராட்டத்தினால், ஆப்கானிஸ்தானில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கவனத்தை இந்த போராட்டம் பெற்று வருகிறது.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இப்போது, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்... அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
"டிரஸ் கோடு"
இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.. தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்திருந்தது.. அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் நிதா முகமது நதிம் இதை பற்றி சொல்லும்போது, "பல்கலைக்கழகம், கல்லூரிக்கு போகும் மாணவிகளுக்கு, உயர்கல்வி அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை 14 மாதங்களுக்கு முன்பே வழங்கியிருந்தது... ஆனால், 14 மாதங்கள் கடந்தும்கூட, இந்த வழிகாட்டுதல்களை மாணவிகள் யாருமே பின்பற்றுவதில்லை. டிரஸ் தொடர்பான விதிகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை...
கண்டிஷன்
முக்கியமாக, கல்வி நிலையங்களுக்கு வரும்போது, ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்று கண்டிஷன் உள்ளது.. ஆனால், அந்த விதியையும் பின்பற்றுவதில்லை. ஏதோ கல்யாணத்துக்கு வருவது போல, மாணவிகள் டிரஸ் அணிந்து வருகின்றனர்... ஹிஜாப் விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை... அதுமட்டுமல்ல, பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள், பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு கொஞ்சம்கூட ஒத்துவராதவை... சில படிப்புகள் இஸ்லாமின் அடிப்படைகளை மீறும் விதமாக பயிற்றுவிக்கப்படுகிறது.. அதனாலேயே இப்படி ஒரு தடையை அறிவித்தோம்" என்று விளக்கம் தந்திருந்தார்.
ஆவேச மாணவிகள்
ஆனால், இந்த விளக்கத்தை கண்டு, ஆப்கன் பெண்கள் மேலும் கொந்தளித்து விட்டர்கள்.. இந்த ஒன்றரை வருட காலமாகவே, ஆப்கன்கள் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தபோதிலும், இதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாது என்று பெண்கள், ஆவேசம் அடைந்துள்ளனர்.. தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. நங்கர்ஹார் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கி உள்ளனர்..
சீரியஸா போயிடுச்சு
"உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் ஹெராத் நகரில் கல்வி எங்களின் உரிமை" என்று முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்திய பெண்கள், மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காகவும் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அபபோது அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியும் அவர்கள் யாருமே கலைந்து செல்லாததால், பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் நடந்தன. தற்போது, மாணவிகள் வெகுண்டெழுந்துவிட்டதால், ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளாஸ்ரூமுக்குள்
தலைநகர் காபூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் நடந்து வருகினற்ன.. இதனிடையே, பெண்களின் எழுச்சியை கண்ட ஆப்கன் மாணவர்கள், அப்பெண்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தங்களுடைய வகுப்புகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர்.. பெண்களை மறுபடியும் கல்லூரிகளில், பல்கலையில் அனுமதிக்கப்படும் வரை, தாங்களும் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்துள்ளனர்...
மூடும் சூழல்
மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கன் அரசு அமைத்துள்ளதாகவும் தெரிகிறது.. ஆனால், மாணவர்கள் அந்த பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படுவார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.. கல்வியை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, திடீரென அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், அவர்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி வருகிறது.. ஆப்கனின் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகளும் உற்றுகவனித்து வருவதுடன், மாணவர்களின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவையும் வலிய பதிவு செய்து வருகின்றன...!!!