உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் பலி விவகாரம்.. இந்தியாவின் இருமல் மருந்துக்கு தடை விதித்த ஹூ!
ஜெனீவா: உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் பலியான விவகாரத்தில் இந்தியாவின் இரு இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லி அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ், ஆம்ப்ரோனால் ஆகிய இரு மருந்துகளை மரியான் பயோடெக் எனும் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மற்ற நாடுகளை போல் உஸ்பெகிஸ்தானும் இந்த இருமல் மருந்துகளை இறக்குமதி செய்து தங்கள் நாட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நாட்டில் இந்த இருமல் மருந்துகளை குடித்த 19 குழந்தைகளின் உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது.

மருத்துவமனை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. அதாவது மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைக்காரர்களிடம் கேட்டு அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிரப்
ஒவ்வொரு சிரப்பும் குழந்தையின் எடை, வயதிற்கேற்ப இத்தனை அளவுதான் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கணக்கு உள்ளது. இது மருத்துவர்களுக்கு தெரியும். அவர்கள் குழந்தையின் வயது, எடையை குறித்துக் கொண்டு மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு இத்தனை மில்லி கொடுங்கள் என அறிவுறுத்துவார்கள். அந்த வகையில் இந்த டாக் 1 மேக்ஸ் சிரப்பை 2.5 முதல் 5 மில்லி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

19 குழந்தைகள் பலி
ஆனால் மருந்துக் கடைக்காரர்கள் அதிகஅளவில் பயன்படுத்தும் வகையில் அளவை கூறியதால் 19 குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அந்த டாக் 1 மேக்ஸ் சிரப்கள், மாத்திரைகள் அந்த நாட்டின் அனைத்து மருந்து கடைகளிலிருந்தும் திரும்ப பெறப்பட்டது.

இருமல் மருந்துகள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்ததால்தான் தங்கள் நாட்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் நொய்டாவில் உள்ள மரியான் பயோடெக்கின் ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 மேக்ஸ் சிரப்பை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

எத்திலீன்
இந்த சிரப்புகளில் டைஎத்திலின் கிளைகால் அல்லது எத்திலீனின் அளவுக்கு அதிக அளவு இருப்பதாக பரிசோதனை கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஹூ தெரிவித்துள்ளது. மேலும் இந்த மரியான் நிறுவன தயாரிப்பின் இந்த குறிப்பிட்ட சிரப்புகள் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த இரு மருந்துகளும் மற்ற நாடுகளில் விற்பனை செய்ய அங்கீகாரம் பெறப்பட்டிருக்கலாம். ஆனால் அவை கள்ளச்சந்தையிலும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என ஹூ தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் ரத்து
உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் இறந்த நிலையில் மரியான் பயோடெக் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ரத்து செய்துள்ளது. ஆய்வின்போது போதுமான ஆவணங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என கேட்டு அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்த 70 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications