அடடே! ஜப்பானுக்கே இப்படியொரு நிலைமையா! 150 ஆண்டுகளில் முதல்முறை.. அப்படியே இருளில் மூழ்கிய டோக்கியோ!
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல இடங்கள் இருளில் மூழ்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே மிக வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பானும் கருதப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளிலும் ஜப்பான் முதலீடுகள் உள்ளன.
கர்நாடகாவில் 3-வது நாளாக பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு- மக்கள் கடும் அச்சம்
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானில் நிலைமை சரியாக இல்லை. கொரோனாவால் உலகின் மற்ற நாடுகளைப் போலவே ஜப்பான் பொருளாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான்
ஜப்பான் நாட்டின் கரென்சியாக யென் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு உள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற போதிலும், கொரோனா ஜப்பானைப் பழிவாங்கிவிட்டது என்றே சொல்லலாம். 2020இல் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது கொரோனா குறையாததால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதிலேயே ஜப்பானுக்குப் பெரிய இழப்பு.
150 ஆண்டுகளில் முதல்முறை
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே ஜப்பான் பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு இப்போது அடுத்த சிக்கல் வந்துள்ளது. அங்கு இப்போது கோடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கே வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே அங்கு மிகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கடந்த 1875ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜப்பானில் பதிவு செய்யப்படும் அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.
ஹீட் ஸ்டிரோக்
இதன் காரணமாக ஜப்பான் நாட்டில் பலருக்கும் ஹீட் ஸ்டிரோக் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள், வயதானவர்கள் எனப் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. வெப்பம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கும் இந்தச் சூழலிலும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று ஜப்பான் அரசு வலியுறுத்துவது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின் தேவை
இந்த வரலாறு காணாத வெப்பம் காரணமாக ஜப்பான் நாட்டின் மின் தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. வெப்பம் காரணமாகப் பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு மின் தேவை அதிகரித்து உள்ளது. டோக்கியோ பகுதியில் உள்ள மக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் மின் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர். தொழில்துறையினருக்கும் இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
இருளில் மூழ்கும் அபாயம்
சிக்கனமாகப் பயன்படுத்தாமல், மின் தேவை அதிகரித்தால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெப்ப அலை காரணமாகக் குறைந்தது இருவர் ஜப்பானில் உயிரிழந்து உள்ளனர். இந்தச் சூழலில் மின்வெட்டும் ஏற்பட்டால், மோசமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் தரப்புக்குச் சிக்கல்
இந்த மின்சார பஞ்சாயத்து ஜப்பான் ஆளும் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி அந்நாட்டில் மேல் சபை தேர்தல் நடைபெற உள்ளது. விலைவாசி உயர்வு, ஜப்பான் கரென்சி யென் மதிப்பு சரிவால் ஏற்றுமதி பாதிப்பு உடன் இந்த மின்சார பிரச்சினையும் சேர்ந்து கொள்ளவே ஆளும் தரப்பு இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது.
காரணம் என்ன
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பானில் மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு அணு உலைகளில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த 2011இல் ஏற்பட்ட புகுஷிமா அணு உலை பேரழிவுக்குப் பின்னர், அணு உலைகள் மூடும் முடிவை ஜப்பான் அரசு எடுத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு அணு உலைகளும் மூடப்பட்டன. இப்போது மின்சார பற்றாக்குறை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.