கர்நாடகாவில் 3-வது நாளாக பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு- மக்கள் கடும் அச்சம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் 3-வது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கர்நாடகா மாநிலத்தின் குடகு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகளில் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் உருண்டன. இதனையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
கர்நாடகாவில் இன்று காலை 7.45 மணிக்கு பதிவான இந்த நில அதிர்வானது ரிக்டரில் 3.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதேபோல் தக்ஷிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் மற்றொரு நில அதிர்வு காலை 9.45 மணி அளவிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடகு உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டரில் 2.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
கடந்த வாரம் கர்நாடகாவின் ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அது ரிக்டரில் 3.4 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இருந்த போதும் கடும் நிலநடுக்கத்துக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.