அருணாசல் ஹெலிகாப்டர் விபத்து.. விபத்திற்கு முன் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த "அந்த" தகவல்.. பின்னணி
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (அக்.21) விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்திற்கு முன்னர் கட்டுப்பாட்டு அறைக்கு ஹெலிகாப்டரிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
அதாவது 'MayDay' என விமானிகள் கூறியுள்ளனர். மே டே என்றால் அவசரம் என்று பொருள்படும். எனவே இந்த தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்து
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'ருத்ரா' வகை ஹெலிகாப்டர்தான் இந்த விபத்தில் சிக்கியது. மேல் சியாங் மாவட்டத்தில் மிக்கிங்கில் காலை 10.43 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இது மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், தாக்குதலுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவையாகும். அதிகபட்சமாக 2 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 280 கி.மீ வேகத்தில் 3.8 மணி நேரம் வரை நிற்காமல் பறக்கும் திறன்கொண்டது.

உயிரிழப்பு
இவ்வாறு இருக்கையில் எப்படி விபத்து ஏற்பட்டது என்று ராணுவத்தினர் விசாரணை செய்து வருகின்றனர். இதில் பயணித்த 5 ராணுவ வீரர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. விபத்திற்கு முன்னதாக ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு 'MayDay' அழைப்பு வந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளன.

MayDay
ஆனால் அதற்குள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிவிட்டிருக்கிறது. மேல் சியாங் பகுதி சீன எல்லையையொட்டி அமைந்திருப்பதால் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அதிகபட்சமாக 430 அடி உயரம் கொண்டவைதான். எனவே ஹெலிகாப்டர் தானாக மோதி விபத்திற்கு உள்ளாகி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'MayDay' அழைப்பு வந்தது உண்மைதான் என்றும், இதனை அடிப்படையாக வைத்துதான் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர்
தற்போது மீட்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் யார் என்பது குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தவாங் அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்திற்கான காரணம் குறித்தும் இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஹெலிகாப்டர்கள் ஒரே மாநிலத்தில் விபத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் ராணுவ வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications