ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மனைவி! ஏய்ய்.. உள்ளே குதித்து.. உயிரை தந்து காத்த புதுமாப்பிள்ளை! ப்ச்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மனைவியை பத்திரமாக மீட்டுவிட்டு புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலை தீபாவளிக்காக மாமனார் வீட்டுக்கு வந்த நிலையில், ஐடி பொறியாளருக்கு நேர்ந்த இந்த முடிவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆற்றில் குளிக்கும் போது நீச்சல் தெரியாதவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்போசிஸ் பொறியாளர்
டெல்லியைச் சேர்ந்தவர் ஷாம் (27). இவர் சென்னையில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெட்டூணிமடம் பகுதியைச் சேர்ந்த சுஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

தலை தீபாவளிக்காக..
இந்நிலையில், தலை தீபாவளி என்பதால் மனைவி சுஷ்மாவை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ஷாம் சென்றுள்ளார். அங்கு தீபாவளி கொண்டாட்டம், விருந்து நிகழ்ச்சிகள் என மகிழ்ச்சியாக அவர்கள் நாட்களை கழித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரியில் இருக்கும் பல சுற்றுலா இடங்களை தனது கணவருக்கு காண்பிக்க வேண்டும் என சுஷ்மா ஆசைப்பட்டுள்ளார். எனவே இருவரும் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியை சுற்றிப் பார்த்துள்ளனர்.

ஆற்றில் குளிக்க ஆசை..
இந்த சூழலில், அங்குள்ள காளிகேசம் மலைப்பகுதி மிகவும் நன்றாக இருக்கும் என்றும், அங்கு செல்ல வேண்டும் எனவும் ஷாமிடம் சுஷ்மா கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் கணவனும், மனைவியும் காளிகேசத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பெரிய ஆறு ஓடுவதை பார்த்த சுஷ்மா அதில் குளிக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, சுஷ்மாவை ஆறு இருக்கும் இடத்துக்கு ஷாம் அழைத்துச் சென்றார். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்ததும் உற்சாகமிகுதியில் சுஷ்மா குளித்துள்ளார். ஷாம் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

மனைவியை மீட்டு உயிரிழந்த சோகம்
இதனால் அருகில் இருந்த ஆழமான பகுதிக்கு சுஷ்மா இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்தார். இதை பார்த்த ஷாம், சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து சுஷ்மாவை கஷ்டப்பட்டு போராடி கரைக்கு இழுத்து வந்தார். அப்போது துரதிருஷ்டவசமாக அங்கிருந்த சகதியில் ஷாமின் கால்கள் சிக்கிவிட்டன. இதனால் வெளியே வர முடியாமல் ஆற்றில் மூழ்கி மனைவியின் கண் முன்பே ஷாம் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து ஷாமின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை காப்பாற்றிவிட்டு புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications