தந்தை அன்பின் முன்னே! தந்தைக்கு சிலை வைத்து சிலிர்க்க வைத்த தனயன்கள்! கண்கலங்கிய கன்னியாகுமரி!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு சிலை செய்து வீட்டு நுழைவு வாயிலில் வைத்து வழிபட்டு வரும் சகோதரர்கள், அப்பகுதி மக்களை அழைத்து விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞான வளர்ச்சியில் மயங்கி தனிமையில் வாழ விரும்பிய இக்கால இளைஞர்களால் நாளுக்கு நாள் முதியோர் இல்லங்களில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் தாய் தந்தையை உயிருக்கும் மேலாக நேசிக்கும் மகன், மகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை பெறவும் தவறுவதில்லை.

தந்தைக்கு சிலை
அந்த வகையில் கன்னியாகுமரி அருகே பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு சிலை செய்து வீட்டு நுழைவு வாயிலில் வைத்து வழிபட்டு வரும் சகோதரர்கள், அப்பகுதி மக்களை அழைத்து விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் திமுக நிர்வாகியாகவும், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளராகவும் இருந்துள்ளார்.

பாசமிகு மகன்கள்
இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2019 ம் ஆண்டு காலமானார். இதனையடுத்து தனது தந்தையின் நினைவாக அவரது நான்கு மகன்களும் ஒன்று சேர்ந்து சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று தாழக்குடியில் உள்ள அவரது வீட்டின் வளாகத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைத்தார்.

நெகிழ்ச்சி
மேலும் இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக கட்சி தொண்டர்கள் உட்பட அனைத்து கட்சியினரும் ஊர் பொதுமக்களும் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் இக்காலத்தில் தனது தந்தை மறைந்த பின்பு அவர் நினைவாக சிலை வைத்த மகன்களின் செயல் அப்பகுதி மக்களிடையே முன் உதாரணமாகவும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிலை திறப்பு
சிலை திறப்பில் கலந்து கொண்ட ஊர் மக்களுக்கு அவரது மகன்கள் விருந்தும் வைத்தனர். மிக நேர்த்தியாக அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிலையை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். தனது தந்தை மிக கடின வேலைகளில் ஈடுபட்டு எங்களை ஆளாக்கி பிறருக்கு உதவி செய்யும் வகையில் அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் திடீரென அவரது மறைவு எங்களால் ஈடு செய்ய முடியவில்லை அதனால் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருவதாக மகன்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications