மாம்பழமாம் மாம்பழம்.. குமரியில் கோலாகலமாக தொடங்கிய மாம்பழ சீசன்.. சூடுபிடிக்கும் விற்பனை!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மாம்பழ சீசன் துவங்கியுள்ளதையடுத்து செந்தூரம், அல்போன்சா, சென்கவரி ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 90 % விளைச்சல் ஆனபிறகே காய்களை பறித்து விற்பனை செய்வதால் கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர்.
இந்தியாவின் தேசிய கனி, முக்கனிகளில் முதல் கனி, கனிகளின் அரசன், தெய்வீகக்கனி என்று பல சிறப்பு பெயர்களுடன் விளங்கிறது மாம்பழம். இதில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, தாது பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, கரோட்டீன், வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துப் பொருட்கள் அடங்கியுள்ளது.
உடலுக்கு வலிமையும், பொலிவும் கொடுக்கும் மாம்பழத்திற்கு செரிமானத்தை தூண்டும் சக்தியும் உண்டு. உலக அளவில் இந்தியா 8.5 சதவீதத்திற்கும் அதிகமாக மா உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.
முன்னோடி
இதில் 0.1 சதவீதம் மட்டுமே ஜாம், ஜெல்லி, பழக்கூழ், பழரசம், உலர்ந்த பழத்துண்டு, ஊறுகாய் என பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆந்திரபிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மா உற்பத்தியில் முன்னோடியாக விளங்குகிறது.
ஏற்றுமதி
தமிழகத்தில் தர்மபுரி, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக அளவில் மா பயிரிடப்பட்டுள்ளது. அப்போன்சா, பங்கனப்பள்ளி, ஹிமாயுதீன், சுவர்ணரேகா, சவுசா, கேசர் ஆகிய ரகங்கள் ஏற்றுமதிக்கு உகந்தவையாக உள்ளது.
ரகங்கள்
வெப்ப மண்டல பயிரான மாவிற்கு ஆம்பிரம், எகின், சிஞ்சம், கொக்கு, சூதம், சேகரம், குதிரை, ஓமை, சேதாரம், மாழை, மாந்தி என பைந்தமிழ் பெயர்களும் உண்டு. செங்கவரிக்காய், திருவரம்பு, கற்கண்டு, அதிமதுரம், பொட்டல், சூரங்குடி, செட்டி ஊட்டு, மஹாராணி ஊட்டு போன்ற குமரி மாவட்டத்தில் மட்டும் கிடைக்கும் ரகங்கள் இடைப்பருவத்திலும் காய்க்கிறது.
அதிகமாக காணப்படுகிறது
மரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழத்திற்கு தனி சுவை உண்டு. எனவே இங்குள்ள மாவிற்கு கிராக்கி அதிகம். இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகமாக காணப்படுகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. தற்போது கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய இடம்
குமரி மாவட்டத்தில் விளையும் சுவை மிகுந்த செங்கவரிக்காய் உள்ளிட்ட மாங்காய் கிலோ 100 முதல் 150 வரை விற்பனை ஆகிறது.கோடைக் காலத்தில் வரும் பழ வகைகளில் தர்ப்பூசணிக்கு அடுத்தபடியாக மாம்பழங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
மாங்காய் உற்பத்தி
ஆண்டுதோறும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் மாம்பழ சீசன், ஆகஸ்ட் மாதம்வரை நீடிக்கும். குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. மயிலாடி, திட்டுவிளை, ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம்.
அல்போன்சா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை சீசனில் முதலில் செந்தூரமும், பங்கனப்பள்ளியும் விற்பனைக்கு வரும். இறுதியாகத்தான் நீலம் வகை விற்பனைக்கு வரும். அதன்படி இப்போது செந்தூரம் ரக மாம்பழம், அல்போன்சா ரகம் விற்பனைக்கு வந்துள்ளன.
வியாபாரிகள்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய்கள் கிடைக்கின்றன. இப் பருவத்தில் மாங்காய்களை தமிழகத்தின் அனைத்து சந்தைகளுக்கும் வியாபாரிகள் அனுப்புகிறார்கள்.
நேரடி சந்தை
கோடை மாம்பழ சீசனை காட்டிலும், இந்த இடைப்பருவ காய்ப்பின்போது வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இது இந்த இரு மாவட்ட மா விவசாயிகளுக்கு கிடைத்துள்ள தனித்தன்மை.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது, குமரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களை நேரடியாகச் சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு வழியில்லாமல் உள்ளது.
விற்பனை
அதனால் பெரும்பாலும் குத்தகைதாரர்களிடம் மரங்களைக் கொடுக்கும் பழக்கமே உள்ளது. இதனால் அதிக விளைச்சல் கண்டாலும் குறைந்தபட்ச வருவாயை மட்டுமே விவசாயிகள் பெற்று வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் மாங்காய்கள் 90 % விளைச்சல் ஆனபிறகே காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
வியாபாரம்
விளைச்சல் குறைவாக இருக்கும் மாங்காய்கள் வியாபாரத்திற்கு வாங்கினால் அவற்றை பழுக்க வைக்க கார்பைட் கற்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படி விற்பனை செய்வதால் லாபம் கிடைக்கும். ஆனால் வாங்கி செல்பவர்கள் பலதரப்பட்ட நோய்களுக்கு உள்ளாவர்கள். மேலும் காய்கள் பழுக்க வைக்காமலே கேரளா மற்றும் வெளியூர்களுக்கு வியாபாரத்திற்கு அனுப்பி வருகிறோம். அதனால் தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் வியாபாரமும் சிறப்பாக உள்ளது என கூறினார்.