கரூர் பள்ளி மாணவி தற்கொலை - புகாரை விசாரிக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி நடவடிக்கை
கரூர் மாணவி தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர்: பாலியல் தொந்தரவு காரணமாக ப்ளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புகார் அளித்தும் அதை பெறாமல் கால தாமதம் செய்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கரூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் கரூரில் பாலியல் தொல்லையால், பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். அவரது தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் பாட்டியுடன் மாணவி இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்து 2 மாதங்கள் ஆன நிலையில் பாட்டி உயிரிழந்து விட்டார்.
பள்ளியில் தற்போது நேரடி வகுப்பு நடைபெறுவதால் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாணவியின் அம்மா வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைக்கு சென்று விட்டார். மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்த மாணவி தனியாக இருந்துள்ளார்.
கார்த்திகை தீபத்தையொட்டி வாசலில் தீபம் வைக்காததால் பக்கத்து வீட்டு பாட்டி வந்து மாணவியை அழைத்துள்ளார். ஆனால் மாணவி வெளியே வரவில்லை. சந்தேசமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாணவி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு போலீசார், மாணவியை தூக்கில் இருந்து இறக்கி பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் வீட்டில் சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனா இப்போது பாதியிலேயே போறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா முடியவில்லை. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மாமா, அம்மு. உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன். மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது, சாரி மச்சான் சாரி என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் தற்கொலைக்கு யார் காரணம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் தற்கொலை குறித்து சரியாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பள்ளி மாணவி தற்கொலை யார் காரணம் என்பது பற்றி விசாரணை நடத்த ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications