நவீன ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு.. தருமபுரியில் பரபரப்பு! 7 பேர் கைது
கிருஷ்ணகிரி: நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருவிலேயே கருக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வனஜா ராகவன் தம்பதியனருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு பேருந்தில் செல்லும் போது அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகி வனஜாவிடம் பேச்சுக் கொடுத்தார்.
சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்
அப்போது தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். அருகே இருந்த பெண்மணி, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து சொல்ல தனக்கு தெரிந்த நண்பர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். வனஜாவிடம் திருப்பத்தூரை சேர்ந்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.
தருமபுரி பேருந்து நிலையம்
அப்பொழுது அவரை தொடர்பு கொண்ட போது கடந்த 12 ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வரசொல்லி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனரான வெங்கடேசன் என்பவரது வீட்டிற்கு காரில் அழைத்து சென்று வனஜாவின் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்துள்ளனர்.
பெண் குழந்தை
அதனை தொடர்ந்து சோதனையில் பெண் குழந்தை என தெரிவித்ததை அடுத்து தனக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை என்றால் எனக்கு வேண்டாம். அதை கருக்கலைப்பு செய்துவிடுமாறு வனஜா, ஜோதியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
ரூ 20 ஆயிரம்
இதையடுத்து கருக்கலைப்பு செய்ய ரூ 20 ஆயிரம் ஆகும் என ஜோதி தெரிவித்தார். பின்னர் 14 ம் தேதி பணத்துடன் வந்த வனஜாவிற்கு வெங்கடேசன் வீட்டில் தருமபுரி அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற தனியார் செவிலியர் மூலம் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கருச்சிதைவு பணி நடந்துள்ளது.
கருவில் இருந்த குழந்தை
இதில் கருவில் இருந்து குழந்தை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ஆனால் கருகலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு வனஜாவை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிக வலி
வீட்டிற்கு சென்ற வனஜாவிற்கு அதிக வலி ஏற்பட்டதால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். ஆனால் ஆபத்தான நிலையில் வனஜா இருந்ததால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டே கருக்கலைப்பு கும்பல் குறித்து ரகசிய தகவல்களை தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழியிடம் வனஜா தெரிவித்துள்ளார். மேலும் தருமபுரி அருகே ராஜபேட்டை ஏரிக்கரை அருகே ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் கருவுற்ற 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு வரவழைத்துள்ளதும் டாக்டர் கனிமொழிக்கு தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார், செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரும் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷின் வீட்டில் 6 கர்ப்பிணிகளுக்கு பிறக்க போவது ஆணா பெண்ணா என்பதை கண்டறிவதற்காக அழைத்து வரப்பட்டனர் என்பது தெரியவந்தது.
ஸ்கேன் கருவி பறிமுதல்
இந்த 7 பேரில் கற்பகம் மட்டுமே செவிலியர் என்றும் அவர்கள் யாரும் மருத்துவம் படிக்காமலேயே ரருக்கலைப்பு உள்ளிட்டவற்றை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ஸ்கேன் பரிசோதனை கருவி, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோ, ரூ 16 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.