இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு.. இளைஞர் கைது
லண்டன்: இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் மரணத்திற்கு பிறகு மன்னரான 3ஆம் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு பிறகு அந்த நாட்டின் மன்னராக அவருடைய மகன் 3ஆம் சார்லஸ் முடி சூட்டிக் கொண்டார்.
அவர் பதவியேற்று ராணிக்கான இறுதி சடங்குகளை முடித்துக் கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவருடன் மனைவி கமிலா சார்லஸும் செல்கிறார். அங்கு பொதுமக்களுடன் இவர்கள் இருவரும் உரையாடி மகிழ்கிறார்கள்.

பயணம்
மேலும் இவர்களின் பயணம் முழுவதும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இருவரும் யோர்க் நகருக்கு சென்றிருந்தனர். அங்கு மக்களுடன் சார்லஸ் உரையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சார்லஸ் மீது ஏதோ ஒரு பொருள் விழுந்தது.

உடைந்த முட்டை
சுதாரிப்பதற்குள் அடுத்தடுக்க பொருட்கள் வீசப்பட்டு அவை உடைந்து சிதறின. அப்போதுதான் மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அடிமை ரத்தம்
அந்த இளைஞர் அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து, நீங்கள் மன்னரே அல்ல என முழக்கங்களை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மன்னரை காப்பாற்றுங்கள் கடவுளே என முழக்கமிட்டனர். மன்னர் மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 ஆண்டுகள்
கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது மரணத்திற்கு பிறகுதான் சார்லஸ் மன்னராகியுள்ளார். ஆனால் அவர் மீது அந்த இளைஞருக்கு என்ன கோபம் என தெரியவில்லை.

மன்னர் சார்லஸ்
இது போல் மன்னர் சார்லஸ் மீது மீண்டும் ஒரு முறை முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது. வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லுட்டன் நகரத்திற்கு நேற்று மன்னர் சார்லஸ் சென்றிருந்தார். அங்குள்ள நகர்மன்ற கட்டடத்திற்கு வெளியே பொதுமக்களை அவர் சந்தித்தார். அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது.

பாதுகாப்பு
உடனடியாக மன்னர் சார்லஸை பாதுகாப்பு அதிகாரிகள் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில் பொதுமக்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாகவும் ஒரு இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது பொதுமக்களிடையே வேதனையை அளித்துள்ளது. சார்லஸ் மன்னரானது சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மன்னரின் பாதுகாப்பை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான இந்த தாக்குதல்களுக்கு காரணத்தை அறிந்து கொள்ள மன்னர் மக்கள் மத்தியில் பேசி வெறுப்புணர்விற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications