மத்திய பிரதேசத்தில் கனமழை.. தெருக்களில் வெள்ளம் மட்டுமல்ல.. முதலையும் புகுந்ததால் பதறிய மக்கள்!
லக்னோ: மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் மக்கள் வசிக்கும் தெருவில் முதலையும் ரவுண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் மழையும் தொடர்ந்து விடாமல் பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கனமழை
தொடர்ந்து ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று காலயிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், தாழ்வான குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடத்துக்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக அரசு தீவிர முன்னெச்சரிக்க நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்
இதைத்தொடர்ந்து நேற்று இரவும் கன மழை பெய்தது. குறிப்பாக மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் அங்குள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கால்வாயில் உள்ள தண்ணீர் சில இடங்களில் ஊருக்குள்ளும் புகுந்தது. குடியிருப்பு சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் கீழ் குடியிருப்பில் இருந்தவர்கள் பலர் மாடிவீடுகளுக்கும், அருகில் உள்ள மீட்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்தனர்.

தெருவில் சுற்றிய முதலை
இதற்கிடையே அந்த கால்வாயில் இருந்து முதலை ஒன்று அந்த வெள்ளநீரில் ஊருக்குள் புகுந்தது. அந்த முதலை பெரிய மக்கள் வசித்து வரும் ஒரு காலணிக்குள் ஜாலியாக ரவுண்டு வருகிறது. இதை அந்த தெருவில் வசித்து வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து பதறி ஓடினர். ஒருசிலர் இது குறித்து அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தெரியப்படுத்தினர். ஒருசிலர் தெருவுக்குள் முதலை வந்ததை பார்த்து ஆச்சரியத்தோடு செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். மேலும் அதை சமூக வலைத்தளத்திலும் பரப்பினர்.

ஒரு மணி நேரம் தண்ணி காட்டிய முதலை
இதற்கிடையே தகவல் அறிந்த வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெருவில் சுற்றித்திருந்த முதலையை பிடிக்க முயன்றனர். முயற்சி பலனளிக்காததால், மாதவ் தேசிய பூங்காவில் இருந்து மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தெருக்களில் சுற்றித்திரிந்த முதலையை பிடிக்க முயன்றனர். ஆனால் முதலையோ, 'நான் ஊர் சுற்றி பார்க்க வந்திருக்கிறேன்' என்ற தொனியில் மீட்பு குழுவினருக்கு தண்ணி காட்டியபடி பல்வேறு தெருக்களை ரவுண்டு அடித்தது. சுமார் ஒரு மணி நேரம் மீட்பு குழுவினரை அலைய விட்ட அந்த முதலை இறுதியில் அவர்களிடம் சிக்கிக்கொண்டது.

சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
எட்டு அடி நீளமுள்ள அந்த முதலையை மீட்பு குழுவினர் அங்குள்ள சன்கியா சாகர் ஏரியில் விட்டனர். முதலை ஊருக்குள் புகுந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாவட்ட கலெக்டர், ஊர் மக்கள் யாரும் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலை ஊருக்குள் புகுந்து தெருக்களில் ரவுண்டு அடித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications