ஹே.. எப்புட்றா?.. ஆனந்த் மஹிந்திராவை "ஆஆஆ" போட வைத்த இளைஞர்.. சிறப்பான கண்டுபிடிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் 6 பேர் வரை அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் மின்சார சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ பரவலாக பரவி வருகிறது.
போக்குவரத்து என்பது தற்போதைய காலகட்டங்களில் தனிநபருக்கானதாக சுருங்கி வருகிறது. அதாவது ஒரே ஒருநபர் வெளியில் செல்வதற்காக காரை பயன்படுத்துகின்றனர். இதனால் காற்று மாசும், போக்குவரத்து இடைஞ்சலும் அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகளுக்குள் மக்கள் செல்ல வேண்டும் என்று சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதாவது தனிநபர் பயணத்திற்கு ரயில், பேருந்து என பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜஸ்ட் 10 ரூபாய்.. 6 பேர் 150 கி.மீ போகலாம்.. அசர வைத்த வண்டி.. ஆனந்தமான ஆனந்த் மகிந்திரா
22 வயது இளைஞர்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அசம்கர் நகரத்தையொட்டியுள்ள கிராமத்தில் வசித்து வருபவர்தான் ஆசாத் அப்துல்லா. 22 வயதான அப்துல்லா இந்த சைக்கிளை உருவாக்க சுமார் 1 மாதம் ஆனது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு பெரிய அளவில் தொழில்நுட்பம் தெரியாது. ஐடிஐதான் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த யோசனை நீண்ட நாட்களாக இருந்தது. நகரங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஏன் எல்லோரும் காரை பயன்படுத்துகிறார்கள்? என்று எனக்குள் கேள்வி இருந்துகொண்டே இருந்தது. காரை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நமக்கு தெரியும். நகரங்களில் ஒரு இடத்திருந்து மற்றொரு இடத்திற்கான தொலைவும் குறைவுதான்.
உருவாக்கம்
எனவே காருக்கு மாற்றாக நாம் ஏன் சைக்கிளை பயன்படுத்தக்கூடாது? இந்த கேள்வியின் அடிப்படையில்தான் இதனை நான் கண்டுபிடித்தேன். முதலில் பழைய இரும்பு கடைக்கு சென்று அங்கு இந்த சைக்கிளுக்கான உதிரி பாகங்களை வாங்கினேன். பின்னர், ஆறு பேர் வரை அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் இதனை வடிவமைத்தேன். இதற்கெல்லாம் ஒரு மாத காலம் ஆனது. பின்னர் ரூ.10,000 - 12,000 வரை செலவு செய்து பேட்ரி, லைட், என அனைத்தையும் வாங்கி சைக்கிளுக்கு ஒரு இறுதி வடிவத்தை கொடுத்தேன். பலமுறை சோதனை ஓட்டத்தை நடத்தி பார்த்த பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தேன். முதலில் நானும் எனது நண்பர்களும்தான் பயணித்தோம். முதல் பயணம் அளவில்லாத மகிழ்ச்சியை அளித்தது.
குறைந்த செலவில்
லித்தியம் பேட்ரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 40கி.மீ வேகத்தில் 150 கி.மீ வரை பயணிக்கலாம். அதேபோல, ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு அதிகபட்சம் 5 மணி நேரம் ஆகும். இதற்கு ரூ.8-10 வரை மட்டுமே செலவாகும். யோசித்து பாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வர ஆறு பேருக்கும் சேர்த்து ரூ.8-10 மட்டுமே செலவாகும் என்றால் எப்படி இருக்கும்? தற்போது நாங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த சைக்கிள் வெறும் மாடல்தான். இதனை மேலும் மேம்படுத்தி அற்புதமாக மாற்றலாம். ஆனால் இதற்கு ஏகப்பட்ட பணம் செலவாகும். தற்போது சைக்கிளுக்கான காப்புரிமை பெற முயன்று வருகிறேன். இந்த சைக்கிள் வெற்றிபெற்றால் இதேபோல பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவேன்" என்று கூறியுள்ளார்.
வீடியோ
இளைஞனின் இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இந்த கண்டுபிடிப்பை உலகளாவிய பயன்பாடாக மாற்ற முடியுமா?" என்று தனது நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியிடம் கேள்வியெழுப்பி அவரை டேக் செய்துள்ளார். மேலும், "கிராமப்புற கண்டுபிடிப்புகளின்பால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளேன். கிராமங்களில் தேவைகள் அதிகமான இருக்கின்றன. தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய். வரும் காலத்தில் ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுலாவுக்கு இதுபோன்ற சைக்கிள்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டு பேருந்துகளாக பயன்படுத்தப்படலாம்" என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பரவி வருகிறது.