வினையான விளையாட்டு! துபாயில் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்த இந்திய ரசிகர்.. உபி போலீஸ் வரை சென்ற விஷயம்!
லக்னோ: ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் துபாயில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின்போது இந்தியாவின் ஜெர்சி விற்றுப்போனதால் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து கிரிக்கெட் பார்த்த ரசிகர் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வேடிக்கைக்காக அவர் செய்த இந்த விஷயம் போலீஸ் வரை சென்றுள்ளது.
ஆசிய கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இருக்கும் பரபரப்பு இந்த போட்டியிலும் இருந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்! சென்னையில் நடத்த ஒத்துழைப்பு தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
சர்ச்சையில் சிக்கிய இந்திய ரசிகர்
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக இந்த போட்டியை காண இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் துபாய் சென்றிருந்தனர். அப்படி இந்தியாவில் இருந்து துபாய் சென்று போட்டியை ரசித்த ஒருவர் தான் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து படங்களை வெளியிட்ட நிலையில் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்
உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியில் வசித்து வருபவர் சயாம் ஜெய்ஷ்வால். மதுபானம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க சென்றார். போட்டியை இந்தியா ஜெர்சி அணிந்து பார்க்க அவர் விரும்பினார். ஆனால் அவர் செல்வதற்குள் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள கடைகளில் இருந்த இந்திய ஜெர்சிகள் விற்று தீர்ந்தன. இதனால் பாகிஸ்தான் ஜெர்சிகள் மட்டுமே இருந்தன.
பாகிஸ்தான் ஜெர்சி அணிந்த ரசிகர்
இதையடுத்து அவர் பாகிஸ்தான் ஜெர்சி வாங்கி அணிந்து இந்தியாவுக்கு சப்போர்ட் செய்ய முடிவு செய்தார். மேலும் மைதானத்தில் உள்ள இருநாட்டு ரசிகர்களுக்கு இது சற்று வித்தியாசமாக இருக்கும் என அவர் நினைத்தார். அதன்படி அவர் பாகிஸ்தான் ஜெர்சி வாங்கி அணிந்து கொண்டார். ஒரு கையில் இந்தியாவின் தேசியக்கொடியும், மறுகையில் பாகிஸ்தான் நாட்டு கொடியும் வைத்து கொண்டு அவர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
போலீஸ் வரை சென்ற விஷயம்
இந்த படங்கள் வேகமாக பரவியது. இதையடுத்து அவரது சொந்த ஊரான பரேலியில் உள்ளவர்கள் சயாம் ஜெய்ஸ்வால் பாகிஸ்தான் ஆதரவாளர் எனக்கூறினர். அதோடு மட்டுமின்றி சம்பவம் குறித்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி போலீஸ் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும் போலீசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.
உள்நோக்கம் இல்லை என விளக்கம்
இதுபற்றி சயாம் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛‛நான் இன்னும் துபாயில் தான் இருக்கிறேன். நான் இந்தியாவின் ஜெர்சி வாங்க முயன்றேன். அது விற்றுத்தீர்ந்ததால் கிடைக்கவில்லை. இதனால் வேடிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் ஜெர்சி வாங்கி அணிந்தேன். மேலும் இந்த டீசர்ட் அணிந்தபடியே மைதானத்தில் ‛ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பினேன். அப்போது பாகிஸ்தான் ரசிகர்கள் என்னை கோபமாக பார்த்தனர். பாகிஸ்தான் ரசிகர்களை டீஸ் செய்யவே இதனை செய்தேன். இதில் உள்நோக்கம் இல்லை'' என்றார்.