பாபரிக்கு மாற்று.. அயோத்தியில் மசூதி கட்ட வழங்கிய இடம்! 2023 இறுதியில் மருத்துவமனையுடன் திறப்பு
லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்சநீதிமன்றம், மசூதிக்காக ஒதுக்க உத்தரவிட்ட 5 ஏக்கர் நிலத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மசூதியுடன் மருத்துவமனையும் திறக்கப்படும் என அதனை நிர்வகிக்கும் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
முகலாய பேரரசர் பாபரால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதியின் நிலத்தை ராம ஜென்ம பூமி என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் உரிமை கோரி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி தகர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக பாபர் மசூதி நில வழக்கின் விசாரணை நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.
புல்டோசரை கொண்டு வாங்க.. அதெப்படி பஸ் ஸ்டாண்ட் மசூதி போல இருக்கலாம்.. சர்ச்சை கிளப்பிய பாஜக எம்பி
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு வழங்கியது. அதில், பாபர் மசூதி அமைந்து இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வால் வழங்கப்பட்டது.
ராமர் கோயில் கட்டுமானம்
அத்துடன் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை வழங்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டிற்கு கோயில் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மசூதியுடன் மருத்துவமனையும், ஆராய்ச்சி மையமும் அமைக்க மசூதியை கட்டும் பணியை நிர்வகிக்கும் இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை திட்டம் தீட்டியது.
அடுத்த ஆண்டில் மசூதி
இந்த நிலையில் கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும், விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை செயலாளர் அத்தார் ஹுசைன் தெரிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மசூதி தயாராகிவிடும் என்றும், அனைத்து கட்டுமானப்பணிகளில் ஒரே நேரத்தில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.