உ.பி இந்த முறை தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் தான் கிங்மேக்கர்! மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் நம்பிக்கை
லக்னோ: ‛‛உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை வரும். இதனால் காங்கிரஸ் தான் கிங்மேக்கராக மாறும்'' என காங்கிரஸ் தேர்தல் மேற்பார்வையாளர் பூபேஷ் பாகேல் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளையுடன் தேர்தல் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்த நிலையில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த முறை காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிடுகிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு காங்கிரஸ் கூட்டணியின்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
முடிவிற்கு வரும் தேர்தல் திருவிழா.. உத்தர பிரதேசத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு
காங்கிரஸ் மேற்பார்வையாளர்
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் காங்கிரஸ் மேற்பார்வையாளராக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகேல் நியமிக்கப்ட்டுள்ளார். இவர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்து வந்தார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கிங்மேக்கர்
உத்தர பிரதேச தேர்தலில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்தை ஆட்சியில் இருந்து விரட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். இதற்கான பாஸை அவர்கள் தேர்தல் மூலம் வழங்கியுள்ளனர். இந்த முறை மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் தான் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக, கிங் மேக்கராக மாறும்.
ஆச்சரியமான முடிவு
1996க்கு பிறகு தற்போது தான் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 400 இடங்களில் போட்டியிடுகிறது. இது மிகப்பெரிய விஷயம். இந்த தேர்தலில் பிற கட்சிகளை போன்று ஜாதி, மத அடிப்படையில் காங்கிரஸ் பிரசாரம் செய்யவில்லை. வளர்ச்சி, மாநில நலன், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என அடிப்படை பிரச்சனைகளை மக்களிடம் எடுத்து கூறி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தல் முடிவு நிச்சயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஏனென்றால் தொண்டர்கள் களத்தில் கடினமாக உழைத்துள்ளனர். காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் இளைஞர்கள், பெண்கள் அதிகமாக பங்கேற்றனர்'' என்றார்.
54 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
உத்தர பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மையம் கொண்டிருந்த பிரசாரம் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கும் நாளையுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. நாளை நடக்கும் இறுதிக்கட்ட தேர்தலானது 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்க உள்ளது. இதில் 13 தொகுதிகள் தனி தொகுதிகளாகும். மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.06 கோடி பேர் ஓட்டளிக்க தயாராக உள்ளனர். 7 கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.