2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன்! சிறையிலிருந்து வெளியே வந்தார் கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பன்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை சந்திப்பது எப்படி குற்றமாகும் என காப்பானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
லக்னோ: 'உபா' மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிகையாளர் 'சித்திக் காப்பனுக்கு' ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாற்று சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இளம்பெண்ணின் உடல் உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இளம்பெண்ணின் உறவினர்கள் மறுத்த நிலையில், காவல்துறை சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியை சேகரிக்க சென்ற சித்திக் காப்பனை உ.பி காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் 3 பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சித்திக் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும், பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சங்கிலி போட்டு கட்டி வைத்து அவரை சாப்பிட விடாமல், இயற்கை உபாதைகள் கழிக்க விடாமல் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உ.பி காவல்துறைக்கு அறிவுறுத்தியது. இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை ஜாமீனில் விடுவிக்காமல் நீதிமன்றம் தாமதித்து வந்ததாக சித்திக்கின் மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
இவரது ஜாமீன் மனு லக்னோ உயர்நீதிமன்றம் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், "பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் பேட்டி எடுக்க சென்றது எப்படி குற்றமாகும்? என கேள்வியெழுப்பி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதனை பலர் வரவேற்ற நிலையில், இவர் சட்ட விரோத பணவரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இது மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்தும் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.