ஜாதி பாகுபாடு பார்க்கிறதாம் மீடியாக்கள்.. டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்சிக்கு தடைபோட்ட மாயாவதி!
லக்னோ: ஊடகங்களிடம் இருக்கும் ஜாதி பாகுபாட்டால், இனி பகுஜன் சமாஜ் கட்சியினர் எந்த ஊடக நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார்கள் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அதற்கடுத்து சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை வென்றுள்ளது.
ஒன்றியம், நாடாளுமன்றம், மாநகராட்சி எல்லாமே கைவிட்டு போச்சு..வலுக்கும் எதிர்ப்பு..சிக்கலில் சீனிவாசன்
அதேபோல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து வரலாற்று சாதனை நிகழ்த்தவிருக்கிறது.
பகுஜன் சமாஜ்
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2017 தேர்தலில் 19 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இந்த முறை ஒரே ஒரு இடங்களில் தான் பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றுள்ளது. தலித் வாக்குகள், முஸ்லிம் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குகள் கொஞ்சமும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழவில்லை என்பதே நிதர்சனம்.
மாயாவதி
உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் மாயாவதி. மிகப்பெரிய ஆளுமையாக, மக்கள் சக்தியாக விளங்கியவர் மாயாவதி. ஆனால் இந்த தேர்தலில் அவரது கட்சி மிகப்பரிதாபமாக தோற்றிருக்கிறது. இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை என மாயாவதி தெரிவித்திருக்கிறார். அதோடு பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியும் குறைந்திருக்கிறது.
மீடியா
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன்னுடைய ட்விட்டரில் ''உத்தரப்பிரதேச தேர்தலின் போது, பகுஜன் சமாஜ் கட்சியை மீடியா காயப்படுத்தி இருக்கிறது. ஜாதி ரீதியாகவும், வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த மீடியாக்கள் செயல்பட்டன. மீடியாக்கள் அவர்கள் தலைவர் சொன்னதை கேட்டு பகுஜன் சமாஜ்மீது வெறுப்பை உமிழ்ந்தன. இது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இதை அவர்கள் எங்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்த வன்மம்.
கண்டிப்பு
நம் கட்சி மீது தொடர்ந்து வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களிடம் ஒன்றை கூறிக்கொள்கிறேன். சுதீந்திர பாதுரியா, தரம்வீர் சவுத்ரி, எம்.ஹெச்.கான் மற்றும் சீமா குஷ்வாலா உள்ளிட்டோர் இனி எந்த மீடியா நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார்கள்'' என்று மாயாவதி கூறியுள்ளார்.
பாஜகவின் பி டீம் தான் பகுஜன் சமாஜ் என ஊடகங்கள் கூறியதால் தான், முஸ்லிம் ஓட்டுகள் தங்களுக்கு விழாமல் போனதாக மாயாவதி நினைக்கிறார். அதனால் தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் கட்சியினர்.