நீங்கதான் உ.பி. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரா? நமட்டு சிரிப்புடன் பிரியங்கா காந்தி சொன்ன அடடே பதில்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தாமே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் அதன் தலைவர் மாயாவதியும் இருக்கிற இடமே தெரியாமல் படு அமைதியாக இருக்கின்றனர். இத்தனைக்கும் பிப்ரவரி 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் சிங்கிள் டிஜிட் இடங்கள் என இழந்து போய்விட்ட செல்வாக்கை மீட்க, காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க பிரியங்கா காந்தி தீவிரமாக முயற்சித்து வருகிறார். 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 7 இடங்கள்தான் கிடைத்தது. தற்போதைய தேர்தலிலும் அதே நிலைமைதான் என்கின்றன கருத்து கணிப்புகள்.
உ.பி. தேர்தல்: உன்னவ் பலாத்கார வழக்கில் பாதித்த சிறுமியின் தாய் போட்டி.. பிரியங்கா காந்தி அறிவிப்பு
அதிரடி பிரியங்கா
இந்நிலையில் தேர்தல் களத்தில் அதிரடியாக 40% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல் உ.பி. தேர்தல் பிரசார களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை பிரியங்கா காந்தி வெளியிட்டும் வருகிறார். இதன் அடுத்த கட்டமாக இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை இன்று பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.
உ.பி.யில் இருந்து தொடங்குவோம்
இந்நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, புதிய இந்தியா, இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்க வேண்டும். இளைய சமூகத்தின் வலிமையில் புதிய உத்தரப்பிரதேசத்தை கட்டி எழுப்புவோம். நாங்கள் வெறுப்பை விதைப்பவர்கள் அல்ல. மக்களை ஒருங்கிணைத்து செயல்படுபவர்கள் நாங்கள் என்றார்.
ஜாதிய அரசியலுக்கு நோ
மேலும் பிரியங்கா காந்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத் அரசு மீது இளைஞர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாங்கள் ஜாதியை கையில் எடுத்து அரசியல் செய்கிறவர்கள் அல்ல. எங்களது இந்த மாநில இளைஞர்கள் மீது நம்பிக்கை உள்ளது. எங்களது இலக்கு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி மட்டும்தான் என்றார்.
முதல்வர் வேட்பாளரா?
அப்போது, நீங்கள்தான் உ.பி.தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு நமட்டு சிரிப்புடன், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா? உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய முகத்தைப் பார்க்க முடியும் என்றார். அதாவது உ.பி. சட்டசபை தேர்தலில் பிரியங்கா காந்திதான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.