மோடியை தொடர்ந்து யோகி.. சீனுக்கு வந்த சிறுத்தை - “புட்டி பால்” தர முயற்சி! பயந்தோடிய சுட்டி குட்டி
லக்னோ: கோரக்பூர் உயிரியல் பூங்காவில் ஆய்வுக்கு சென்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறுத்தை குட்டிக்கு புட்டி பால் வழங்கினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷஹீத் அஷ்பக்குல்லா கான் வன உயிரியல் பூங்காவில் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவைகள் உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் இந்த வன உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கு சென்றார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கிஷன் மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்றனர். அங்கு வன விலங்குகள், பறவைகள், பூங்காவில் செய்யப்பட்டு இருக்கும் வசதிகள், நிறைகுறைகள், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த அவர் பூங்கா அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்த மத்திய அரசு..
சிறுத்தை குட்டி
அப்போது கூண்டில் இருந்த சிறுத்தை குட்டியை அவர் பார்வையிட்டார். சிறிது நேரத்தில் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் தூக்கி பிடித்துக்கொள்ள யோகி ஆதித்யநாத் பாட்டிலில் பால் கொடுத்தார். பின்னர் அதை தானே தூக்கி யோகி ஆதித்யநாத் பால் கொடுக்க முயன்றார்.
புட்டி பால்
ஆனால், அந்த சிறுத்தை குட்டி பால் அருந்த மறுத்தது. யோகி ஆதித்யநாத் கையில் இருந்து துள்ளி குதித்து சிறுத்தை குட்டி ஓடியது. அந்த குட்டி சிறுத்தையை அதிகாரிகள் உடனடியாக பிடித்தனர். அது மீண்டும் யோகியிடமே வழங்கப்பட்டது. இம்முறை கெட்டியாக அந்த குட்டி சிறுத்தையை பிடித்துக் கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பாட்டிலில் பால் கொடுத்தார்.
புதிய பூங்கா
சிறிது நேரம் கழித்து சிறுத்தை மீண்டும் கூண்டிற்கு உள்ளேயே விடப்பட்டது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறுத்தைக்கு பால் ஊட்டி மகிழும் வீடியோவை அம்மாநில அரசு வெளியிட்டு உள்ளது. இந்த ஷஹீத் அஷ்பக்குல்லா கான் வன உயிரியல் பூங்காவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
டிரெண்டாகும் வீடியோ
இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் 3 வது வன உயிரியல் பூங்காவாகும். அதேபோல் பூர்வாஞ்சல் மண்டலத்தின் முதல் வன உயிரியல் பூங்கா இது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் ஆப்பிரிக்க சீட்டா வகை சிறுத்தைகள் திறந்துவிட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டதைபோல் தற்போது இதுவும் பகிரப்படுகிறது.