காப்பர் டி: அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி கருத்தடை சாதனம்.. மதுரையில் பெண் பகீர் புகார்!
மதுரை: தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அவசர தேவைகளுக்காக உயிர்காக்கும் சிகிச்சைக்காகவும் எங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் ஒருசேர செயல்பட்டு வருவதால் தங்கள் உயிர் காக்கும் உன்னத மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை தென் மாவட்ட மக்கள் நம்பி வருகின்றனர்.

புகார்
இதனிடையே பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் தாய்மார்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்காமலேயே காப்பர்-டி எனப்படும் கருத்தடை சாதனத்தை பொருத்தப்படுவதாகவும், இதனால் குழந்தை பெற்ற தாய்மார்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு தற்போது வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை
மதுரை மாநகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்த நிலையில்,இரண்டு நாட்கள் வழக்கமான சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார். மூன்றாவது நாளிலிருந்து அவருக்கு வயிற்றுப் பகுதியில் திடீரென கடும் வலி ஏற்பட்டுள்ளது. இயல்பை விட அதிகமான வழியாக இருந்ததால் தனக்கு வழங்கப்பட்ட நோயாளர் அறிக்கையை தனக்கு தெரிந்த மருத்துவரிடம் காட்டியபோது, அவர் கூறிய தகவல் அந்த பெண்ணுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அனுமதியின்றி காப்பர்-டி பொருத்தம்
அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் தெரிவிக்காமலேயே மருத்துவமனையில் காப்பர்-டி எனும் கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. பொதுவாக காப்பர்-டி அல்லது குடும்ப கட்டுப்பாடு செய்யும் போது தாய்மார்கள் அல்லது அவர்களது கணவர். உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்து உரிய ஆவணங்களில் கையெழுத்து பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுபோல தெரிவிக்காமலேயே பல பெண்களுக்கு காப்பர் டி பொருத்தப்பட உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

விசாரணை நடத்த கோரிக்கை
பொதுவாக காப்பர்-டி பொருத்தம் பெண்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனினும், சிலருக்கு உடல் அமைப்பு மற்றும் குழந்தை பிறந்த தன்மையைப் பொருத்து கடும் வயிற்று வலி உள்ளிட்ட இன்னல்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் அதற்கு உரிய சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் இதுகுறித்த முறையான அறிவிப்பின்றி மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது












Click it and Unblock the Notifications