கம்பெனி இல்ல.. ‘அரசியல்’.. ‘மக்களின் நாடித்துடிப்பு தெரியலயே’ - பிடிஆரை சீண்டிய ஆர்பி உதயகுமார்!
மதுரை : நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மக்களின் நாடி துடிப்பு தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சாடியுள்ளார்.
முந்தைய அதிமுக அரசுக்கு செயல்திறன் இல்லை. நிதி மேலாண்மை தெரியவில்லை, அதிகமாக கடன் வாங்கிவிட்டார்கள் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதற்கு பதிலடியாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லும் நிதி நிலைமை கம்பெனி கணக்கிற்கு வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர ஏழை எளிய மக்களுக்கு எந்த பலனும் அளிக்காது எனக் கூறியுள்ளார்.
பிஎஃப் தடை.. தமிழ்நாடு அரசும் பின்பற்றனும்! முதல்வர் மீது மக்கள் சந்தேகம் - கிளப்பிவிடும் எச்.ராஜா
அடுக்கிய பிடிஆர்
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பேட்டியில் மூச்சுக் காற்றை நிறுத்தி, காற்றை சேமித்தேன் என சில கருத்துகளை கூறி உள்ளார். அதிமுகவுக்கு செயல்திறன் இல்லை. நிதி மேலாண்மை தெரியவில்லை. அரசு கடன் வாங்கினால் முதலீட்டுக்கு தான் போட வேண்டும். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட ஒளிவுமறைவுடன் ரூ.30 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.
உதயகுமார் பதிலடி
இந்நிலையில், நேற்று செய்தியாளார்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்பி உதயகுமார், "2011ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1. 14 லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக கடன் இருந்தது. அதில் அனைத்தும் மூலதன செலவு செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் 2021-2ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கடன்
2022 -23ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள். வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா? அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரியவில்லை என்கிறார்.
தகுந்த பதிலடி கிடைக்கும்
தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும்? அந்த துறைகளுக்கு தானே சேரும். அதுவும் தமிழ்நாடு அரசு தானே? சொத்து வரி பெறும் துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே? அந்த வருவாய் எதற்கு பயன்படும் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.
மக்களின் நாடி துடிப்பு தெரியலையே
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லும் நிதி நிலைமை கம்பெனி கணக்கிற்கு வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர ஏழை எளிய மக்களுக்கு எந்த பலனும் அளிக்காது. நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மக்களின் நாடி துடிப்பு தெரியவில்லை. நிதி அமைச்சர் பேச்சில் வல்லவராக இருக்கலாம், செயல் வடிவில் அல்ல. உங்களுக்கு முன்பாக அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்.
சிறந்த நிதி அமைச்சர் அல்ல
நான்கு தலைமுறை அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள்? 30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்ற நிதி அமைச்சருக்கு அரசியல் என்பது வேறு கம்பேனி வேறு என்பது தெரியவில்லை. நிதித் துறை ஆலோசகராக வேண்டுமானால் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் சிறந்த நிதி அமைச்சர் அல்ல.
சுவாசத்தை நிறுத்திவிட வேண்டாம்
உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை சொல்லாமல் வீண் பொய் சொல்லக் கூடாது. திமுக நிர்வாகத்தில் தோல்வி அடைந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கொள்கை ரீதியாக ரத்து செய்தது திமுக. சாமானிய மக்களின் சுவாசத்தை நிறுத்தி விட வேண்டாம்" எனச் சாடியுள்ளார்.