கோகுல்ராஜ் கொலை.. அது நான் இல்லை..பிறழ் சாட்சியம் சொன்ன சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜுடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சுவாதி சாட்சியம் அளித்துள்ளார். மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்தார். இன்று ஆஜரான சுவாதி கடந்த வாரம் அளித்த வாக்குமூலத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார் கோகுல்ராஜ். அவருடன் அவரது தோழியும் சென்றிருந்தார். அப்போது சிலர் அந்த பெண்ணை விரட்டி விட்டு கோகுல்ராஜை கடத்தி சென்றனர். உறவினர்களும் பெற்றோர்களும் கோகுல்ராஜை தேடிய நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலையாகி கிடந்தார்.

10 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2019ல் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சுவாதி ஆஜர்
இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த 5 பேரின் விடுதலையை ரத்து செய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி, கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நீதிபதிகளின் உத்தரவுபடி போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.

சுவாதி சத்தியம்
அப்போது, 'புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்' என நீதிபதிகள் கூறினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது. ஞாபகம் இல்லை என்று கூறினார். போலீசார் கூறியதால் சொன்னேன். எழுதிக் கொடுத்தேன்' என்றும் சுவாதி பதிலளித்தார்.

கோகுல்ராஜை பார்க்கவில்லை
சம்பவம் நடந்த அன்று காலையில் கோகுல்ராஜை பார்க்கவில்லை என்று சுவாதி கூறினார். கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார்.

கண்ணீர் விட்ட சுவாதி
அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றனர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையை கூற வேண்டும்" என்று சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர்.

அது நான் இல்லை
அதற்கு சுவாதி வீடியோவில் உள்ளது கோகுல்ராஜ் தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள், ''உங்களை, உங்களுக்கே அடையாளம் தெரியவில்லையா? எதையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும். உண்மைகளை கூறாவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறினாலும் மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணை நடந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல
மாஜிஸ்திரேட் முன் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்களா? கோகுல்ராஜை 23ம் தேதி பார்க்கவில்லை என்றீர்கள். ஆனால், வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று சுவாதியிடம் கேட்டனர். அதற்கு பதில் சொன்ன சுவாதி, போலீசார் எழுதிக் கொடுத்ததை மாஜிஸ்திரேட்டிடம் கூறினேன்' என்றும் தெரிவித்தார். அப்போது சுவாதி பேசியது தொடர்பான ஆடியோவை போட்டுக் காட்டிய பின்னர் நீதிபதிகள், இந்த ஆடியோவில் உள்ளது யாருடைய குரல் என்றனர்.அதற்கு சுவாதி, நான் பேசவில்லை. அது எனது குரல் அல்ல என்றார். அப்படியானால் உங்களது குரலை பதிவு செய்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி வரும் என்று கூறினார்.

மன அழுத்தம்
யுவராஜ் யார் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டனர். இதற்கு, சமீபத்தில் தான் தெரியும். அந்த வழக்கு துவங்கியபோது யார் என்று தெரியாது. அதிக அழுத்தத்தால் பல விஷயங்கள் என் நினைவில் இல்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள் உங்களுக்கு அழுத்தம் எங்கிருந்து வந்தது. காவல்துறையிடமிருந்தா? குற்றவாளிகள் தரப்பிலா என்று கேட்டனர். விசாரணையின் போது காவல்துறை சொன்னதை செய்தேன் என்று கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு
நீங்கள் உண்மையை மறைத்து, வேண்டுமென்றே கூறுகிறீர்கள். நீதிமன்றத்தை விளையாட்டு மைதானம் என்று நினைக்க வேண்டாம். உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். உண்மையை சொல்லுங்கள் என்றனர். இதற்கு, நான் என்ன அவமதிப்பு செய்தேன் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள், நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்பு தான் என்று கூறினார்.

சத்தியம் செய்து விட்டு பொய் கூறலாமா?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது நியாயம், தர்மம், சத்தியம். சாதியோ, மதமோ அல்ல. உங்கள் புகைப்படத்தைப் பார்த்து யாரென தெரியவில்லை என்கிறீர்கள். எல்லோரையும் முட்டாள் என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தை மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது எனக் கூறினால் எப்படி? என்று கேட்டனர்.

மிரட்டுகிறார்களா?
நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எது சரி, எது தவறு என்பது உங்களுக்குத் தெரியும். கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. காவல்துறையினர், அரசு வழக்கறிஞர்கள் மிரட்டினார்கள் என்பதைத் தாண்டி, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்துவிட்டு, இப்போது மிரட்டினார்கள் என்றால் எப்படி? இதையும் தாண்டி உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். உண்மையை கூறினால், ஏதேனும் அழுத்தமோ, பிரச்னையோ ஏற்படுமானால் அதையும் கூறுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு சுவாதி, எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன் என்று கூறினார்

நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், சத்தியம் என்றைக்காக இருந்தாலும் சுடும் என்றனர். நவம்பர் 30ஆம் தேதி சுவாதியை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சுவாதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த வாரம் அளித்த வாக்குமூலத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று சுவாதி கூறினார். இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications