போட்டித்தேர்வு மாணவர்கள் படிக்க.. மதுரையில் தொடங்கப்பட்ட முதல் "படிப்பக பூங்கா".. சு.வெ நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மதுரையில் 'படிப்பக பூங்கா' தொடங்கப்பட்டுள்ளது
மதுரை: போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்காக உலகத்தமிழ்ச் சங்க கட்டடத்தின் அருகே பிரத்யேக படிப்பக பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில், மாநிலத்திலேயே முதல்முறையாக மதுரையில் 'படிப்பக பூங்கா' தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணவர்களுக்கு என்று பிரத்யேக கவனம் அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்க முகாம் நடத்தியது, மாணவர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாமல் தவித்த போது குரல் கொடுத்தது என்று ஏராளமான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க கட்டடம் அருகே படிப்பக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பக பூங்கா மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தியில் பேசு- நடிகர் சித்தார்த்தை சீண்டிய மதுரை CISF வீரர்-விசாரிக்க வெங்கடேசன் எம்பி கோரிக்கை
மாணவர்கள்
கடந்த சில ஆண்டுகளாக பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அரசுப் பணிக்காக தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு என்று பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், ஏழை எளிய மாணவர்கள், வீடுகளில் படிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் என ஏராளமானோர் வெளியில் வந்து பூங்காவில் அமர்ந்து படித்து வருகிறார்கள்.
வசதிகள் இல்லை
அந்த வகையில் மதுரை மாவட்டத்தின் ராஜாஜி பூங்கா, மாநகராட்சி பூங்கா, மாநகராட்சி அலுவலகம், காந்தி அருங்காட்சியகம், சுந்தரம் பார்க் உள்ளிட்ட கிடைத்த இடங்களில் மாணவர்கள் படித்து வந்தனர். இவ்வாறு படிக்கும் போது எழும் சந்தேகங்களை, நண்பர்களுடன் கலந்துரையாடி விடையறிந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனால் இந்த பூங்காக்களில் மாணவர்கள் படிப்பதற்கு என்று பிரத்யேக வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடிகளில் அமர்ந்து படித்து வந்தனர்.
படிப்பக பூங்கா
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முன்னெடுப்பால் மதுரை உலகத்தமிழ்ச் சங்க கட்டடத்தின் அருகில் படிப்பக பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு என்று ஒருங்கிணைந்த படிப்பக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி இருவரும் தொடங்கி வைத்துள்ளனர்.
சு.வெங்கடேசன் வீடியோ
இந்த படிப்பக பூங்கா குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில், மதுரை மாணவர்களுக்கு என்று ஒருங்கிணைந்த படிப்பக பூங்கா திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல்முறையாக மதுரையில் 'படிப்பக பூங்கா' என்று கூட சொல்லலாம். நீண்ட நாள் கனவு என்று சொல்வதை விடவும், இது ஒரு தொடக்கம்தான். இந்த பூங்காவிற்கு என்று எதிர்காலத்தில் ஏராளமான திட்டங்கள் உள்ளது. மாணவர்கள் படிப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளது. இது முதல் முயற்சியின் தொடக்க நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.