வேலையில்லாதவர்கள்..இந்தியில் பேசி கடுமை காட்டினர்..மதுரை விமான நிலைய CRPF மீது சித்தார்த் விமர்சனம்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியும் அதை கேட்காமல் இந்தியில் பேசி சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக பிரபல நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த்.. தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள சித்தார்த் பொதுவிவகாரங்க்ளில் வெளிப்படையாக பேசக்கூடியவர்.
தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

துன்புறுத்தலுக்கு உள்ளானோம்
முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பதிவில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பதிவில் சித்தார்த் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:- "மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்களாக துன்புறுத்தலுக்கு உள்ளானோம். பைகளில் இருந்த காயின்களை எடுக்குமாறு எனது வயதான பெற்றோர்களிடம் கூறினர். தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.

அதிகாரத்தை காட்டுகின்றனர்
ஆங்கிலத்தில் பேசுமாறு நான் வலியுறுத்தியும் அதை கேட்காமல் தொடர்ந்து இந்தியில் பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது கடுமையாக நடந்து கொண்ட அதிகாரிகள், இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்" என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவு இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள்
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் 24 மணி நேரம் மட்டுமே காட்டும் என்பதால் தற்போது அவரது பதிவு இல்லை. இருந்தாலும் இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் பரவி வருகிறது. பல ஆங்கில ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவும் சித்தார்த்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ரிசர்வ் படை போலீசாரே..
அந்த வகையில் மதுரை விமான நிலைய பாதுகாப்பும் மத்திய ரிசர்வ் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை பரிசோதனை செய்யும் பணிகளில் ரிசர்வ் படை போலீசாரே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களே இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தி திணிப்புக்கு எதிராக
இந்த நிலையில், தான் விமான நிலையத்தில் தன்னிடம் இந்தியில் பேசி துன்புறுத்தும் வகையில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் நடந்து கொண்டதாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆளும் திமுக குரல் கொடுத்து வரும் நிலையில் சித்தார்த்த்தின் இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications