பாலமேடு ஜல்லிக்கட்டு ஸ்டார்ட்.. மல்லுக்கட்டும் வீரர்கள்! மாட்டுப் பொங்கலில் விழாக்கோலம் பூண்ட மதுரை
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நேற்று நடந்து முடிந்த நிலையில் மாட்டுப் பொங்கல் நாளான இன்று காலை 8 மணியளவில் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் வீர விளையாட்டுக்களில் முக்கியமானதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் கருதப்படுகின்றன. மாடுகளை துன்புறுத்துவதாக கூறி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக்கோரி பல நாட்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தனி மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது.

ஜல்லிக்கட்டு போட்டிகள்
இதனை தொடர்ந்து பொங்கல் காலங்களில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவையாக பார்க்கப்பட்டு வருகிறது.

மதுரை ஜல்லிக்கட்டு
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம், ஊர் கமிட்டியினரும் இணைந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கார், தங்க நகை, மோட்டார் பைக், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு
இதனை தொடர்ந்து இன்று உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 150 மாடுபிடி வீரர்களும் 700 காளைகளும் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளனர். சிறந்த மாடு பிடி வீரர்கள் 2 பேருக்கு காரும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக்கும், தங்க நாணயங்களும், ரொக்கத் தொகைகளும் இதர பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்
ஆன்லைன் மூலம் பதிவு செய்த எண்களின் அடிப்படையிலேயே காளைகளை அவிழ்க்கப்படும் எனவும், பார்வையாளர்களுக்கான மாடங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கின்றன.












Click it and Unblock the Notifications