மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.. 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!
மதுரை: மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் 36,660 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் குடும்ப திருமண நிகழ்வு கருப்பாயூரணி பகுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்வுக்குப் பிறகு, மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியத்துவம் கொண்ட இந்த மேம்பாலம், மதுரையின் வளர்ச்சிக்கு இன்னொரு முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் "தமிழ்நாடு வளர்கிறது" என்ற பெயரில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், தமிழக அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய கட்டமாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. மதுரையில் "தமிழ்நாடு வளர்கிறது" என்கிற பெயரில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முதலமைச்சர் முன்னிலையில் 56 ஆயிரத்து 766 புதிய வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது.
பின்னர் மதுரை உத்தங்குடியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதில் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழு பெண்கள், பல்வேறு நலத்திட்ட பயனாளிகள் என மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டம் இன்று முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications