அங்கே ஒன்னு, இங்கே ஒன்னு... இதுதான் தமிழ் மீது உள்ள அக்கறையா? மோடி உரையை விளாசிய சு.வெங்கடேசன்
மதுரை: காசி தமிழ் சங்க விழாவில் தமிழை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்த நிலையில் இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
டெல்லி மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டும் எனில் 'இந்தி' மொழித் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதனை சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன் மத்திய அரசின் மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், "பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்" என்றும் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கம்
தமிழ்நாட்டுக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்வு கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா என பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் இது இரு மாநிலங்கள் தொடர்பான நிகழ்வு என்று கூறி நடத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பில் எவ்வித ஆலோசனைகளும் பெறப்படவில்லை.

விமர்சனம்
மேலும் இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலாக நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில், பிரதமர் இந்நிகழ்ச்சியில் பேசியது அனைவராலும் கவனத்திற்கு உள்ளாகியது. அதாவது, "தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை" என்று கூறியிருந்தார். உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மொழியை இந்தியர்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமரின் இந்த உரை குறித்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ட்வீட்
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்கிறது 11-11-2022 தேதியிட்ட அறிவிப்பு. தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை என காசியில் நடைபெற்ற ஒன்றிய கல்வித்துறையின் நிகழ்வில் பிரதமர் பேசுவார். இந்தியை காப்பதே எங்களின் வேலை என அதே கல்வித்துறை டெல்லியிலிருந்து உத்தரவு வெளியிடும். டெல்லி மத்திய பல்கலைக் கழகத்தில் இந்தி இல்லாவிட்டால் இளநிலைப் பட்டம் இல்லை. இதுதான் ஒன்றிய பாஜக அரசு. 'பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்' என்ற பழமொழி பொருத்தமானதே" என்று கூறியுள்ளார்.

இந்தி கட்டாயம்
அதாவது, மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற Compulsory Test in Hindi (CTH) எனும் கட்டாய இந்தி தேர்வு எழுத வேண்டும் என்றும் இதில் தேர்ச்சி பெற்றால்தான் பட்டம் பெற முடியும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னர் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வெழுதி பட்டம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது இந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே பட்டம். இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மத்திய பல்கலைக்கழகத்தில் பயில பல்வேறு மாநில மாணவர்கள் வருவார்கள். அப்படி இருக்க இந்தியை மட்டும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இந்நிலையில் தற்போது எம்பி சு.வெங்கடேசனும் இதனை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications