காவிரி, வைகையில் பெருகிய வெள்ளம்..மூழ்கிய தரைப்பாலங்கள்..போக்குவரத்து துண்டிப்பு
மதுரை: வைகை ஆற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் மதுரை தென்கரை வடகரையில் உள்ள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கியதால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் திருச்சி உத்தமர் சீலி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் வருஷநாடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வைகை அணை 70 கனஅடியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளை சுற்றி தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வைகை அணையை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதையொட்டி, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.
மதுரையில் வெள்ளம்
வெள்ள நீர், சிம்மக்கல், யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. அதன் இருபுறமும் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக மதுரை நகரில் முக்கிய பாலங்கள் மற்றும் வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரையோரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 7000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி அணையில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியிலிருந்தும் விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணவரும் அந்த பகுதி மக்கள், ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
காவிரியில் வெள்ளம்
காவிரியில் அதிக நீர்வரத்து காரணமாக திருச்சி - கல்லணை சாலையில் உத்தமர்சீலி அருகே தண்ணீர் கரை வழியாக வழிந்து கொள்ளிடம் ஆற்றில் சென்று கலக்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் பலநூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.