கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தியில்லை.. தவறுகள் நடக்குது- நிதியமைச்சர் பிடிஆர் பேச்சால் பரபர
மதுரை : கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தியில்லை என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறையை விமர்சித்துப் பேசியுள்ளார்.
கூட்டுறவுத்துறையில் கடத்தல்கள் அதிகமாக நடப்பதாக தகவல்கள் வருகிறது என கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியிலேயே நிதி அமைச்சர் பிடிஆர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டுறவு வார விழா
மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மடீட்சியா அரங்கில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடத்தல் நடக்குது
கூட்டுறவு இயக்கம் சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிறது. இது கொள்கை ரீதியாக செயல்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத் துறையை மாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்படுவது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல செய்திகள் வருகிறது என அமைச்சர் பிடிஆர் பேசியுள்ளார்.

திருப்தி இல்லை
கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை எனவும் புகார்கள் வருகின்றன. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சலசலப்பு
மேலும் பேசிய அமைச்சர் பிடிஆர், எனது தாத்தா மற்றும் தந்தை கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருந்துள்ளனர். எனக்கு கூட்டுறவுத்துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது. உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். கூட்டுறவுத்துறை வார விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications