மதுரை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு.. கறுப்பு கொடி போராட்டம்.. 17 பேர் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்து சென்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை வந்திருந்தார்.

மத்திய அமைச்சர் எல். முருகனும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளிப்புறத்தில் கறுப்புக்கொடியுடன் தமமுக மற்றும் சம நீதி அமைப்பு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகிகள் அப்துல் ஹமீது, பக்ருதீன், மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்து சென்றனர். ஆளுநர் வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
முன்னதாக மாணவர்கள் மத்தியில் ஆளுநர் அரசியல் முயற்சி செய்வதாக கூறி பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications