காவி ரஜினி.. மாட்ட மாட்டேன்னு சொன்னாரே! வள்ளுவருக்கும் ரஜினிக்கும் ஒருசேர விபூதி அடித்த ரசிகர்கள்!
மதுரை : ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள், 'காவி' திருவள்ளுவர் போன்ற தோற்றத்தில் ரஜினிகாந்த்துக்கு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சிலர் மதுரையில் ரஜினியை வள்ளுவராக்கி காவி உடை அணிவித்து போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி, அது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளான நிலையில், தற்போது காவி சாயம் பூசப்பட்ட திருவள்ளுவராக ரஜினிகாந்த்தை சித்தரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் - ஆன்மிகம்
நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர். அடிக்கடி இமயமலை சென்று தியானம் செய்பவர். பலமுறை ஆன்மிகம் பற்றி பொது மேடைகளில் பேசியவர். தனது அரசியலும் ஆன்மிக அரசியல் என அறிவித்தவர். அரசியலுக்கு வருவேன் என கால் நூற்றாண்டு காலமாகச் சொல்லி வந்த ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்னர், அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, பின்னர் அந்த முடிவைக் கைவிட்டார்.

பாஜகவுக்கு ஒத்துழைக்காத ரஜினி
இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்ட ரஜினிகாந்த், பல்வேறு விஷயங்களில் தெரிவித்த கருத்துகள் காரணமாக அவர், பாஜகவில் சேர்வார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ரஜினிகாந்த்தை தங்களுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க பாஜக கடுமையாக முயன்றபோதும், அதற்கு ரஜினி ஒத்துழைக்கவில்லை.

காவி திருவள்ளுவர்
இதற்கிடையே, 2019ஆம் ஆண்டில்திருவள்ளுவர் உடைக்கு காவி சாயம் பூசிய படங்களை பாஜக வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்ததால் சர்ச்சை வெடித்தது. இதைக் கண்டித்து தொடர் போராட்டங்களும், கடும் விவாதங்களும் நடந்தது. மக்கள் கொண்டாடும் ஞானிகளையும், தலைவர்களையும் காவி சாயம் பூசி அபகரிக்க நினைப்பதாக விமர்சிக்கப்பட்டது.

மாட்ட மாட்டேன்
அந்த காலகட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்திடம், நீங்கள் பாஜகவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, பாஜக நிறத்தை என் மீது பூசப் பார்க்கிறார்கள், வள்ளுவர் மீதும் பூசப் பார்க்கிறார்கள். நானும் மாட்ட மாட்டேன், வள்ளுவரும் மாட்ட மாட்டார் என தனது ஸ்டைலில் ட்ரேட் மார்க் சிரிப்போடு பதில் அளித்தார்.

வாழும் வள்ளுவரே
இந்நிலையில் தான் மதுரை ரஜினி ரசிகர்கள், ரஜினியே மறுத்த காவி சாயத்தை அவருக்கும், திருவள்ளுவருக்கும் ஒருசேர சூட்டி அழகு பார்த்துள்ளனர். 'வாழும் வள்ளுவரே' என ரஜினிகாந்த்தை குறிப்பிட்டு, "அவரினிது, இவரினிது என்பர் ரஜினி புகழும், குணமும் அறியாதோர்" என புதுக்குறள் ஒன்றையும் எழுதி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

காவி ரஜினி
காவி உடை அணிந்த திருவள்ளுவர் உருவத்தில் ரஜினிகாந்த் முகத்தை வைத்து, ருத்ராட்சம், பட்டை அணிவித்து, ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு போஸ்டர்களை நகரெங்கும் ஒட்டியுள்ளனர் திருப்பரங்குன்றம் பகுதி ரசிகர்கள். ரஜினிக்கும், திருவள்ளுவருக்கும் காவி பூசிய ரசிகர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications