உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சி.. 3000 உறுப்பினர்கள் கூண்டோடு அணி மாற்றம்.. ஏக்நாத் ஷிண்டே குஷி!
மும்பை: சிவசேனா யாருக்கு என்பதில் இன்னும் பிரச்சினை ஓயாத நிலையில் உத்தவ் தாக்கரே அணியில் இருந்து 3 ஆயிரம் உறுப்பினர்கள் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.
ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.
சிவசேனா சின்னம், கட்சி தொடர்பான வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம் அதிரடி
மகாராஷ்டிர அரசியல்
மேலும், இந்துத்வா கொள்கையில் மாறுபட்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார். அதன்படி மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி கடந்த 2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்துவந்தது. இந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் நெருக்கமானவருமான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.
இரண்டாக பிரிந்த சிவசேனா
தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களை திரட்டி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து உத்தவ் தாக்கரேக்கு பெருத்த தலைவலியை உருவாக்கினார். சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மமாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா இரண்டாக பிரிந்தது.
ஆதரவு திரட்ட முயற்சி
இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சமீபத்தில் கூட தசரா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக சிவசேனாவின் இரு அணிகளும் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இரு அணிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து மாநகராட்சி உத்தரவிட்டது.
3000 உறுப்பினர்கள் ஏக்னாத் அணியில்
இதற்கிடையே உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவின் சொந்த தொகுதியான மும்பை ஒர்லி பகுதியை சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் உறுப்பினர்கள் 3 ஆயிரம் கூண்டோடு ஏக்னாத் ஷிண்டே அணிக்கு மாறியுள்ளது உத்தவ் தாக்கரேக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் தசரா பேரணி நடக்கவிருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரே அணியில் இருந்து 3 ஆயிரம் உறுப்பினர்கள் அணி மாறியுள்ளது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு
அதுவும் தனது மகனின் தொகுதியில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்கள் ஏக்னாத் ஷிண்டே அணிக்கு மாறியுள்ளது உத்தவ் தாக்கரேக்கு பெரும் அடியாக மாறியுள்ளது. சிவசேனாவை ஒன்றிணைக்க உத்தவ் தாக்கரே முயற்சித்து வரும் நிலையில், 3 ஆயிரம் உறுப்பினர்கள் அணி மாறியுள்ளது அவரக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.