அதிருப்தி தெரிவித்த சிவசேனா! பாஜக மீதான பழைய கேஸ்களை தூசி தட்டும் என்சிபி! மகாராஷ்டிராவில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மீது தேசியவாத காங்கிரஸ் கட்சி மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் எடுத்து பேசியுள்ளார். இதையடுத்து மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்களின் பழைய வழக்குகள் விரைவில் தூசி தட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிராவில் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. காலம் காலமாக பாஜகவுடன் கைகோர்த்திருந்த சிவசேனா கடந்த சட்டசபை தேர்தலின்போது வேறு நிலைபாட்டை எடுத்தது.
இந்த கூட்டணிக்கு ‛மகாராஷ்டிர விகாஸ் அகாடி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகிகள் 30 சதவீதம் மாற்றம்? பரபர பின்னணி
முரண்பாடு, அதிருப்தி
இந்நிலையில் தான் கூட்டணியில் உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தேசியவாத காங்கிரஸ் மீது சிவசேனா அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய விசாரணை அமைப்புகளால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்துறையை கையில் வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என சிவசேனா அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் செயல்களும் சிவசேனாவை கோபமடைய செய்துள்ளது. இதில் சில சம்பவங்கள் வருமாறு:
முதல் சம்பவம்
மேலும் பாஜகவை எதிர்க்கும்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பின்வாங்குவதாக சிவேசோன கருதுகிறது. இதற்கு சாட்சியாக சில சம்பவங்களை சிவசேனா முன்வைத்துள்ளது. அதன்படி மார்ச் 13ல் போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சைபர் கிரைம் பிரிவின் பிகேசி அலுவலகத்தில் ஆஜராகுமாறு மும்பை போலீசார் கூறினர். அதன்பிறகு இது ரத்து செய்யப்பட்டது. பட்னாவிஸ் வாக்குமூலத்தை அவரது மலபார் ஹில் இல்லத்தில் போலீசார் பதிவு செய்தனர். போலீஸ் துறை சிவசேனா வசமுள்ள நிலையில் இந்த நடவடிக்கையால் சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது.
2வது சம்பவம்
பிப்ரவரி மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்தனர். இதுதொடர்பாக சிவசேனா, பாஜக இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வருமான அஜித் பவார், ‛‛இரு தரப்பும் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. இந்த விஷயம் கட்டுப்பாட்டை மீறி செல்வதை தடுக்க வேண்டும்'' என கருத்து கூறியிருந்தார். கட்சியின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு சிவசேனாவை கோபத்தில் ஆழ்த்தியது.
3வது சம்பவம்
கடந்த ஆண்டு சபாநாயகரை திட்டி அவருக்கு எதிரான செயலில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்கள் ஓராண்டுக்கு சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது அஜித் பவார், ‛‛எம்எல்ஏக்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு 12 மாத தண்டனை அதிகம்'' எனும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
4வது சம்பவம்
மார்ச் 28ல் ராஜ்யசபா எம்பியான தேசியவாத காங்கிரஸின் மஜீத் மேமன் ட்வீ ட் ஒன்றை வெளியிட்டார். அதில், "நரேந்திர மோடி மக்கள் மனங்களை வென்று உலகின் மிகப் பிரபலமான தலைவராகவும் காட்டப்படுவார் என்றால், அவரிடம் சில குணங்கள் இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் செய்யாத நல்ல பணிகளை அவர் செய்திருக்க வேண்டும்'' என கருத்து தெரிவித்து உள்ளார். இது பிரதமர் நரேந்திர மோடியை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளதாக சிவசேனா கருதுகிறது.
10க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 10க்கும் அதிக தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன. குறிப்பாக முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமானஅனில் தேஷ்முக் கடந்த ஆண்டு நவம்பரில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் மற்றொரு பணமோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். மேலும் பாஜக தலைவர் கிரித் சோமையாவின் புகார்களை தொடர்ந்து, சிவசேனா அமைச்சர் அனில் பராப்பன் விடுதிகளை இடிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மீது கோபமடைந்துள்ளது.
சட்டசபையில் முதல்வர்
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டசபையில் பேசினார். அப்போது மைத்துனர் ஸ்ரீதர் படங்கருக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணை பற்றி குறிப்பிட்டார். அதில், "நீங்கள் (பாஜக) ஆட்சிக்கு வர விரும்பினால், ஆட்சிக்கு வாருங்கள். ஆனால் தவறான செயல்களை செய்யாதீர்கள். எங்கள் மீதான கோபத்தில் குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை நாங்கள் ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை'' என கூறியிருந்தார்.
களமிறங்கிய உத்தவ் தாக்கரே
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ், பாஜகவிடம் மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக சிவசேனா கடும் அதிருப்தியில் உள்ளது. கூட்டணி முறிந்து விடக்கூடாது எனும் வேளையில் பாஜகவை மாநிலத்தில் சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் சிவசேனா விரும்புகிறது. இதனால் இந்த விஷயத்தில் நேரிடையாக முதல்வர் உத்தவ் தாக்கரே களத்தில் இறங்கியுள்ளார்.
சரத்பவாருடன் பேச்சு
இதுதொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் பேசியுள்ளார். அப்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜகவை சேர்ந்து எதிர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான நடவடிக்கை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதுபற்றி சிவசேனா தரப்பில் கேட்டபோது, ‛‛பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தனிப்பட்ட உறவுகள் மூலம் ஒருவரையொருவர் காப்பாற்றி கொள்ள முயற்சிக்கின்றன. இதில் முதல்வர் மகிழ்ச்சியடையவில்லை. இதனால் முதல்வர் உத்தவ்தாக்கரே, சரத்பவாரிடம் இதுபற்றி எடுத்து கூறியுள்ளார். அவரும் பாஜகவை நேருக்கு நேர் எதிர்க்க ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் வரும் நாட்களில் சில மாற்றங்கள் தெரியும்'' என தெரிவித்தார்.
முந்தைய வழக்குகள் மீது விசாரணை
மாற்றங்களா அது என்ன என்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவரிடம் கேட்டதற்கு, ‛‛முந்தைய பாஜக தலைமையிலான ஆட்சியில் இருந்து ஊழல் தொடர்பான வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படும். இதுகுறித்து விரைவில் ஆலோசனை செய்து இறுதி முடிவுகள் எட்டப்படும்'' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கூறுவது என்ன
இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பாஜக மீது மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் குற்றச்சாட்டை அக்கட்சியினர் மறுத்துள்ளனர். இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,"பாஜகவுக்கு எதிராக சிவசேனா மட்டுமல்ல, தேசியவாத காங்கிரசும் போராடி வருகிறது. பாஜகவின் நடவடிக்கையை தொடர்ந்து கண்டித்து வருகிறோம்'' என்றார். இன்னொரு தலைவர் கூறுகையில், "நாங்கள் பாஜகவை எப்படி ஆக்ரோஷமாக எதிர்கொண்டாலும் உள்துறை எங்களிடம் இருப்பதால் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று சில சிவசேனா தலைவர்கள் கருதுகிறார்கள்'' என்றார்.
கடுமையாக எதிர்க்கிறோம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், ‛‛உண்மையில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளை நாங்கள் கடுமையாக விமர்சித்து வருகிறோம். மகாராஷ்டிரா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். எங்கள் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்கள் சட்டத்தின் ஆட்சேபனைக்குரிய பிரிவுகளின் கீழும், மத்திய அமைப்புகளின் விசாரணை என்ற போலிக்காரணத்தின் கீழும் சிறையில் உள்ளனர். இரு தலைவர்களும் இந்த வழக்குகளில் நியாயமான விசாரணைக்காக காத்திருக்கின்றனர்" என்று சிவசேனாவின் குற்றச்சாட்டை மறுத்தார்.
ஆட்சிக்கு பிரச்சனையா
சிவசேனா, காங்கிரஸ் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், மகாராஷ்டிராவில் நடக்கும் ஆட்சிக்கு பிரச்சனை இல்லை. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என இருகட்சியினரும் கூறியுள்னளர். மேலும் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் அவை பேச்சுவார்த்தைகள் மூலம் எளிமையாக சமாளிக்கும் நிலை தான் இருகட்சியினரிடமும் உள்ளது என இருகட்சியினரும் கூறுகின்றனர்.
காங்கிரஸ் நிலைப்பாடு என்ன
இதற்கிடையே தான் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் பாஜகவை எதிர்ப்பதில் கவனமாக உள்ளது. பாஜகவுக்கு எதிராக சிவசேனா ஆக்ரோஷமாக இருக்கும் நிலை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டதற்கு, ‛‛யாராவது பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை" என்றார். இதன்மூலம் காங்கிரசும், பாஜக மீது மென்மை போக்கை கடைப்பிடித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது