ஆக்சிஜன் வாயு கசிவு விபத்து: 24 நோயாளிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி உத்தவ் தாக்கரே
உயிரிழந்த 24 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை: நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்தது துரதிருஷ்டவசமான சம்பவம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 24 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2023 பேர் உயிரந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளிலேயே சேமித்து வைத்து அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டரின் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு நேற்றைய தினம் லாரிமூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து மருத்துவமனையிலுள்ள டேங்கிற்கு ஆக்சிஜனை மாற்றும் போது திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் டேங்கரிலிருந்து வாயு கசிந்தது. இதனால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 24 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மருத்துவமனையில் நடந்தது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்த 24 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.