ஊரடங்கு விதிகளை மீறிய.. தாயிடமிருந்து காய்கறிகள் பறிமுதல்.. கடமை தவறாமல் செயல்பட்ட நகராட்சி ஊழியர்!
மும்பை: ஊரடங்கு விதிகளை மீறியது தனது தாய் என தெரிந்தும், அவர் மீது நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா நகராட்சி ஊழியர் பலரது பாராட்டையும் அள்ளி வருகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகக் கடுமையாக உள்ளது. இதனால் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி -கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதா..? பாஜகவுக்கு துரைமுருகன் கண்டனம்..!
ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்துக்கு ஏற்ப சில தளர்வுகள் வழங்கியுள்ளன. குறிப்பாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு குறிப்பட்ட நேரங்களை நிர்ணயித்துள்ளன.
ஊரடங்கு விதிகள்
ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார், நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். வேறு சிலர் தங்களுக்கு தெரிந்தவர்கள் விதிகளை மீறினால் கண்டு கொள்ளாமல் விடுவதும், சிலர் பணம் பெற்றுக் கொண்டு விதிகளை மீறுபவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.
அசத்திய ஊழியர்
ஆனால் ஊரடங்கு விதிகளை மீறியது தனது தாய் என தெரிந்தும், அவர் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியர் பலரது பாராட்டையும் அள்ளி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுனை சேர்ந்தவர் ரஷீத் சேக் (36). பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வரும் இவர் கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களை கண்காணிக்கும் பறக்கும் படையிலும் உள்ளார்.
காய்கறிகளை பறிமுதல் செய்தார்
சில நாட்களுக்கு முன்பு ரஷீத் சேக் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தனது தாயார் விதிகளை மீறி வீட்டின் அருகே தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வருவதை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷீத் சேக், தாய் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் விதிகளை மீறிய தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்து நகராட்சி வண்டியில் கொட்டினார்.
குவியும் பாராட்டு
ஊரடங்கு விதிகளை மீறியது தனது தாய் என்று தெரிந்தும் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் நடவடிக்கை எடுத்த ரஷீத் சேக்கை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக ஊழியர் ரஷீத் சேக் கூறுகையில், " ஊரடங்கு உத்தரவின்பேரில் வீதி, வீதியாக சென்று காய்கறி விற்க தடை இல்லை. ஆனால் வீதிகளில் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது கூடாரம் அமைத்தோ காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. இதுபற்றி எனது தாயிடம் முன்கூட்டியே தெளிவாக கூறியிருந்தேன். ஆனால் அவர் அதை கேட்காமல் விதிமுறையை மீறியதால் நடவடிக்கையை எடுத்தேன்'' என்றார். ரஷீத் சேக் மற்ற ஊழியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்று நகராட்சி ஆணையர் அவரை பாராட்டினார்.