போனை எடுத்த உத்தவ் தாக்கரே.. ஷிண்டேவுடன் சரமாரி பேச்சு.. 10 நிமிடம் பேசியது என்ன? மகா.வில் பரபரப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டுள்ளது. அங்கு சிவசேனா கட்சியை சேர்ந்த 33 எம்எல்ஏக்கள் ஆளும் மகா கூட்டணி எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் நேற்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே போனில் பேசியது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சிவசேனாவிற்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆட்சி கவிழும்?
இந்த நிலையில்தான் சிவசேனா மூத்த உறுப்பினரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து 33 எம்எல்ஏக்கள் வரை அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். நேற்று குஜராத் சென்ற இவர்கள் அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்தனர். பாஜக ஆளும் குஜராத்தில் இருந்து தற்போது பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்திக்கு இவர்கள் சென்றுள்ளனர். 33 சிவசேனா எம்எல்ஏக்கள், 7 சுயேட்சைகள் அரசுக்கு எதிராக திரும்பி உள்ளதால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

போனில் பேசினார்
இந்த நிலையில் குஜராத்தில் இருந்த ஷிண்டேவிடம் நேற்று மாலை உத்தவ் தாக்கரே போனில் பேசினார். சிவசேனாவின் மிலிந்த் நார்வேக்கார் போன் மூலம் உத்தவ் தாக்கரே ஷிண்டேவிடம் பேசினார். அதில், நீங்கள் திரும்பி வந்துவிடுங்கள். உங்கள் கோரிக்கையை பேசி தீர்ப்போம். குஜராத்தில் இருப்பதால் மாற்றம் ஏற்பட போவதில்லை. திரும்பி வந்துவிடுங்கள் என்று ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். ஆனால் இதை ஷிண்டே கேட்கவில்லை.

என்ன சொன்னார்?
அதோடு, மீண்டும் பாஜகவோடு கூட்டணி வையுங்கள். அதுதான் முறையாக இருக்கும். பாஜகவுடன் சேர்ந்து நாம் ஆட்சி செய்வதே சரியான கூட்டணியாக இருக்கும் என்று ஷிண்டே உத்தவ் தாக்கரேவிடம் கூறி இருக்கிறாராம். அதற்கு நாம் பாஜகவுடன் இருந்ததால் நிறைய இழந்துவிட்டோம். அவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும். இது நியாயமான பேச்சு கிடையாது என்று ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறாராம்.

பதிலடி
நேற்று 33 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய ஷிண்டே இன்று அசாம் சென்றதும் தனக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை. அடுத்து என்ன செய்வேன் என்று திட்டமிடவில்லை. பாலசாகேப் பால் தாக்கரே வழியில் நான் நடக்கிறேன். அவரின் இந்துத்துவா பாதையில் நான் நடக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். ஷிண்டேவின் இந்த செயலால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications