என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள்.. அப்பா பெயரை தொடக்கூடாது.. கடுப்பான உத்தவ் தாக்கரே..!
மும்பை: சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏ-க்கள் பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று திடீரென சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இவருக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதலில் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அசாம் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தந்தை பெயரில் மகனை கவிழ்க்க திட்டம்.. அதிருப்தி எம்எல்ஏ குழுவுக்கு “சிவசேனா பாலாசாகேப்” எனப்பெயர்
சிவசேனா போராட்டம்
இதனிடையே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்னாந்த் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
144 தடை
அதேபோல் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தால் மும்பை மற்றும் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஜூன் 30ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதித்து தானே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சிவசேனா தொண்டர்கள் எங்கு எப்போது போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பது தெரியாததால், மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவசேனா பாலாசாகேப்
இதனிடையே அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கும் நடவடிக்கையில் சிவசேனா இறங்கியுள்ளது. முதல் கட்டமாக 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பால்தாக்கரே என்று தனது அணிக்கு பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தாங்களே உண்மையான சிவசேனா என்று பேசியுள்ளார்.
கொதித்த உத்தவ் தாக்கரே
இதுகுறித்து பேசியுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏ-க்கள் யாருடனுடம் கூட்டணி வைக்கலாம். அவர்களின் விருப்பத்தில் தான் தலையிட விரும்பவில்லை. ஆனால் பால் தாக்கரேவின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சஞ்சய் ராவத், தேர்தலின் போது மக்கள் வாக்கு தேவை என்றால், அவரவரின் தந்தை பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.