இடைத்தேர்தல் சுவாரஸ்யம்.. 2வது இடத்தில் நோட்டா.. நோட்டாவுக்கு ஓட்டு போட பணம்? பரபர குற்றச்சாட்டு!
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் ருதுஜா லட்கே 66 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் நோட்டா சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது.
பாஜக தனது வேட்பாளரை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்ற நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜகவினர், நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பணம் கொடுத்து கேன்வாஸ் செய்ததாக உத்தவ் தாக்கரே சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
இறந்த தலைவரின் குடும்பத்திற்கு எதிராக போட்டியிட விரும்பவில்லை எனக் கூறி வாபஸ் பெற்றாலும், நோட்டாவுக்கு வாக்களித்து தங்கள் குணத்தைக் காட்டியிருக்கிறது பாஜக என சிவசேனா கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இடைத்தேர்தல்
நாடு முழுவதும் காலியாக இருந்த 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச், தெலுங்கானாவில் முனுகோட், உத்தரபிரதேச மாநிலத்தில் கோலா கோகர்நாத், ஹரியானா மாநிலத்தில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.

3 தொகுதிகளில் பாஜக முன்னிலை
இதில் ஆதம்பூர் (ஹரியானா), தம்நகர் (ஒடிசா), கோலா கோக்ராநத் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா) உத்தவ் தாக்கரே சிவசேனா, கோபால்கஞ்ச் (பிகார்), மொகாமா (பிகார்) ஆகிய தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம், முனுகோட் (தெலங்கானா) தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

சிவசேனா
இதில் மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சியை கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை இரண்டாக உடைத்தது பாஜக. தற்போது அங்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மும்பை அந்தேரி கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த சிவசேனாவை சேர்ந்த ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மரணம் அடைந்ததை அடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்தேரி கிழக்கு
இந்த இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே களம் இறக்கப்பட்டார். அவருக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்றும், பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்தது ஷிண்டே அணி. பாஜக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது. மரணம் அடைந்த எம்.எல்.ஏ குடும்பத்தினருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே வேட்பாளரை திரும்ப பெற்றதாக பாஜக தெரிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிலைப்பாடு இருந்தால் வேட்பாளரை நிறுத்தியது ஏன் என்றும், தோல்வி பயம் காரணமாகவே பாஜக வேட்பாளரை வாபஸ் பெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனா குற்றம்சாட்டியது.

வாக்கு எண்ணிக்கையில் சுவாரஸ்யம்
பாஜக போட்டியில் இருந்து விலகியதால் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியானது. இந்த தொகுதியில் 31.74 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன. பாஜக போட்டியில் இருந்து விலகியதால் தேர்தல் விறுவிறுப்பு குறைந்ததாகவும், இதன் காரணமாகவே மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவானதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் சுவாரஸ்யம் நடந்துள்ளது.

நோட்டா இரண்டாம் இடம்
அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் ருதுஜா லட்கே ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 66,247 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது நோட்டா. நோட்டா சின்னத்திற்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

குற்றச்சாட்டு
இறந்துபோன எம்.எல்.ஏ குடும்பத்திற்கு எதிராக போட்டியிடப் போவதில்லை எனக் கூறி பாஜக தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றாலும், சிவசேனா வேட்பாளரை அவர்கள் ஆதரிக்கவில்லை. பணம் கொடுத்து நோட்டாவுக்கு வாக்களிக்கச் செய்துள்ளனர், நோட்டா வாக்குகள் சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளன என உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் அனில் பரப் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications