இந்த வருடத்திலேயே முதல் முறை.. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.72.25-ஆக சரிவு
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக திங்கள்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு 72.03 என்ற அளவில் துவங்கிய நிலையில், அது மேலும் குறைந்து, 72.25 ஆகியுள்ளது.
2019ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கான ரூபாய் மதிப்பு சரிவு இதுவாகும். சீன நாட்டின் பண மதிப்பான யுவான் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கமும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாகும்.
இருப்பினும் சர்வதேச எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதால், ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்த்து வருகிறது. ஒருவேளை கச்சா எண்ணை விலையும் உயர்ந்தால், பண மதிப்பிழப்பால் இந்தியா கூடுதல் டாலர்களை, கச்சா எண்ணைக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
அமெரிக்கா-சீனா நடுவே நடக்கும் வர்த்தக யுத்தமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம். 75 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை சீனா அதிகரித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கு பதிலடியாக, 550 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இருப்பினும், இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டிருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதார சரிவை கட்டுப்படுத்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சில அறிவிப்புகள் பங்குச் சந்தையில் பாசிட்டிவ் சிக்னலை காண்பித்தன.
நுகர்வை அதிகரிப்பதற்காக, வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளன, இது வீடு, வாகன மற்றும் பிற கடன்கள் மீதான ஈ.எம்.ஐ.களை குறைக்க வழிவகுக்கும். இதன் காரணமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.