மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க விடமாட்டோம்: காங். மூத்த தலைவர் ஹூசைன் தல்வாய்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்கவிடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹூசைன் தல்வாய் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களைப் பெற்ற பாஜக 56 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.
ஆனால் சமமான அதிகாரப் பகிர்வு என்கிற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக நிராகரிப்பதால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்து புதிய அரசு அமையலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹூசைன் தல்வாய் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் கட்சியில் இருந்து வெளியே செல்லவில்லை. காங்கிரஸ் மேலிடம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவர்.
மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க அனுமதிக்கமாட்டோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களது கூட்டணி கட்சி. மகாராஷ்டிராவை காப்பாற்றுவதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவால் விலைக்கு வாங்கிவிட முடியாது. காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில தலைவர்களும் கூட இப்போது எங்கள் கட்சிக்கே திரும்பும் முடிவில் இருக்கின்றனர். இவ்வாறு ஹூசைன் தல்வாய் கூறினார்.