பெரும் பதற்றம்.. நாகையில் வெடித்த பாஜக-காங்கிரஸ் மோதல்! பிபிசி ஆவணப்படத்தை பாதியில் நிறுத்திய போலீஸ்
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை நாகையில் திரையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை பாஜகவினர் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெடித்த மதக்கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு இருப்பதாக கூறும் பிபிசியின் ஆவணப்படத்தை மத்திய அரசின் தடையை மீறி நேற்று காங்கிரஸ் கட்சியினர் நாகப்பட்டினத்தில் திரையிட முயன்றபோது அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இந்த கோர மத வன்முறை உலகைளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரிட்டன் அரசின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வைத்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி, "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
காவல்துறை அனுமதியுடன் சென்னையில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்! வள்ளுவர் கோட்டத்தில் பார்த்த மக்கள்
பிரதமர் மோடியின் பங்கு
அதில், பிரதமர் மோடியின் பங்கு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டு இருப்பது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 பாகமாக வெளியாகி உள்ள இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது உள்ளதால் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்கள்
வெளிநாடுகளில் இதற்கு தடை இல்லை என்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்த ஆவணப்படம் பகிரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன.
மாணவர்கள் ஆர்வம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர் அமைப்பினர் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி ஜேஎன்யுவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் ஏராளமானார் இதை திரையிட்டு பார்த்து உள்ளனர்.
மார்க்சிஸ்ட் பெண் கவுன்சிலர் கைது
கடந்த சில நாட்களுக்கு முன் DYFI அமைப்பு சென்னையில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டத்தை நடத்தியது. இதில் சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் என்ற அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆவணப்படத்தை போலீஸ் அனுமதியுடன் திரையிட்டனர்.
நாகை காங்கிரஸ்
இந்த நிலையில் நேற்று நாகப்பட்டினத்தின் அபிராமி சன்னதி திடலில் இருக்கு காங்கிரஸ் அலுவலகம் முன் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு நின்று இந்த ஆவணப் படத்தை பார்வையிட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் - பாஜக மோதல்
பிபிசி ஆவணப்படத்தை இங்கு திரையிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் மோதலை தடுத்து நிறுத்தி பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஆவணப்படம் திரையிடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.